இந்நிலையில், லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்ட துல்லிய வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பை தோற்றுவித்தவர்களில் ஒருவரும், அந்த அமைப்பின் தலைவருமான ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்தார். அவருக்கு பாதுகாப்பாக இருந்த 30க்கும் மேற்பட்டோரும் கொல்லப்பட்டனர். இதே தாக்குதலில் ஈரானின் துணை ராணுவப் புரட்சி காவல் படையின் துணைத் தளபதி அப்பாஸ் நில்ஃபோருஷானும் கொல்லப்பட்டார். ஹசன் நஸ்ரல்லா கொலைக்குப் பதிலடி அளிக்கும் வகையில், இஸ்ரேலுக்கு எதிராக கடுமையாக எதிர்வினையாற்ற வேண்டும் என்று ஈரானின் தேசிய பாதுகாப்பு நாடாளுமன்றக் குழு வலியுறுத்தியது. கடந்த சில நாள்களில் லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் 87 சிறார்கள், 156 பெண்கள் உள்பட 1,030 பேர் உயிரிழந்தனர் என்று லெபனான் சுகாதாரத் துறை தெரிவித்தது. லெபனானின் தெற்கு புறநகர்ப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 105 பேர் கொல்லப்பட்டனர். ராணுவ ஜெட் விமானங்கள் மூலம் இடைவிடாமல் குண்டுகளை இஸ்ரேல் ஏவி வருவதால், லெபனான் திணறி வருகிறது. இஸ்ரேல் படைகள் தங்களது ராணுவ உபகரணங்கள் மற்றும் டாங்கி போன்ற போர் வாகனங்களுடன், லெபனானின் எல்லைக்கு அருகில் குவிக்கப்பட்டுள்ளன.
இதுவரை வான்வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல், வரும் நாட்களில் தரைவழி தாக்குதலை நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே ‘பாப்புலர் ஃப்ரண்ட் ஃபார் லிபரேஷன் ஆஃப் பாலஸ்தீனம்’ என்ற ஆயுதம் தாங்கிய குழுவை சேர்ந்த மூன்று தளபதிகளும் கொல்லப்பட்டனர். இதற்கிடையே போரினால் பாதிக்கப்பட்ட ஏமனின் ஹொடைடா துறைமுகம் உட்பட ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி தீவிரவாத அமைப்பினரின் நிலைகள் மீது இஸ்ரேல் படைகள் வான்வழி தாக்குதல்களை நடத்தின. குறிப்பாக ஏமன் துறைமுக நகரமான ஹொடைடா, ராஸ் இசா துறைமுகம் மற்றும் மின் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகளை குறிவைத்து இஸ்ரேல் படைகள் வான்வழி தாக்குதல்களை நடத்தியது. ஏற்கனவே காசாவில் ஹமாஸ் அமைப்பினரை ஒடுக்கிய இஸ்ரேல், கடந்த ஒரு வாரமாக லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாசுக்கும், ஹிஸ்புல்லாவுக்கும் ஆதரவாக செயல்பட்டு வந்த ஏமனின் ஹவுதி அமைப்பினர் மீதும் இஸ்ரேலின் பார்வை சென்றுள்ளது.
இந்த ஹவுதி அமைப்பினர் தான், அவ்வப்போது சர்வதேச நாடுகளின் சரக்கு கப்பல்களை கடத்தி பெரிய அளவில் தாக்குதல் நடத்தி வந்தனர். ஹவுதி கும்பலிடம் இருந்து அந்த கப்பல்களை மீட்ப
தற்கு சர்வதேச நாடுகள் பெரும் முயற்சிகளை எடுக்க வேண்டியிருக்கிறது. அதனால் ஹமாஸ், ஹிஸ்புல்லாவை தொடர்ந்து ஹவுதி மீதும் தனது தாக்குதல் நடவடிக்கையை இஸ்ரேல் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக நீடித்த பகை, மோசமான உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. ஹசன் நஸ்ரல்லாவின் மரணத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மத்திய கிழக்கு நாடுகளின் சில அமைப்புகள் ஒன்றாக கைகோர்த்து வருகின்றன. அதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இருந்தாலும் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் ஆதரவளித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
The post மத்திய கிழக்கு நாடுகளில் உச்சகட்ட போர் பதற்றம்; ஹமாஸ், ஹிஸ்புல்லாவை தொடர்ந்து ஹவுதி மீதும் ‘அட்டாக்’: இஸ்ரேலின் அதிரடி நடவடிக்கையால் தீவிரவாத அமைப்புகள் அலறல் appeared first on Dinakaran.