வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது

நெல்லை, செப். 29: நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகேயுள்ள புதுமனையை சேர்ந்த ராஜ்குமார் மகன் ஆனந்தராஜ் (37). கூலி தொழிலாளி. இவரது மாமியார் வீடு அடுத்த தெருவில் உள்ளது. இவரது மாமியார் வீட்டருகே வசித்து வரும் பெருமாள் மகன் சிவகுமார் (40). கூலி தொழிலாளி. இவருக்கும் ஆனந்தராஜ் மாமியாருக்கும் இடையே கழிவு நீர் ஓடை தொடர்பாக தகராறு இருந்து வருகிறது. இதில் மாமியாருக்கு ஆதரவாக ஆனந்தராஜ் அவ்வப்போது சிவகுமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவது வழக்கமாம். இந்நிலையில் நேற்று ஆனந்த்ராஜ் அவரது மாமியார் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிவகுமார் அவரிடம் தகராறு செய்தார். தகராறு முற்றவே சிவகுமார் கத்தியால் ஆனந்தராஜை குத்தி விட்டு தப்பி சென்றார். படுகாயமடைந்த ஆனந்தராஜை அங்கிருந்தவர்கள் மீட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிந்து சிவகுமாரை கைது செய்து, அவரிடமிருந்து கத்தியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: