இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் ஏவுகணைகளை வீசி தாக்குதல்: லெபனானுக்குள் தரைவழித் தாக்குதல் நடத்த இஸ்ரேல் ஆயத்தம்

இஸ்ரேல்: இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து லெபனானுக்குள் புகுந்து தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேலிய ராணுவம் தயாராகி வருகிறது. ஈரானின் ஆதரவு பெற்று லெபனானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது கடந்த திங்கட்கிழமை இஸ்ரேல் ராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 548 பேர் கொல்லப்பட்டனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் அப்பாவி பொதுமக்கள் ஆவர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்றும் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது ராக்கெட்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவி ஹிஸ்புல்லா அமைப்பினர் உக்கிரமான தாக்குதலை நடத்தினர். குறிப்பாக இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாத் அலுவலகம் மீது ஏவுகணைகள் வீசப்பட்டன. இதனை தொடர்ந்து தனது வான்வழி தாக்குதலை தீவிரப்படுத்திய இஸ்ரேல். லெபனாலில் நேற்று மேலும் 72 பொதுமக்களை கொன்றது.

இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் மொத்த எண்ணிக்கை 620 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான் அரசு கூறியுள்ளது. இரு தரப்பிலும் வான்வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் சூழ்நிலையில் லெபனானுக்குள் புகுந்து தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தி 1200 பேரை கொன்று 250 பேரை பிணை கைதிகளாக ஹமாஸ் அமைப்பு பிடித்து சென்றது.

இதனால் ஹமாஸின் ஆளுகையின் கீழ் உள்ள காசா மீது கடந்த 11 மாதங்களாக இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. காசாவில் மட்டும் 41 ஆயிரம் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸுக்கு ஆதரவாக களம் இறங்கிய ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் தற்போது உக்கிர மோதல் ஏற்பட்டுள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகளை தொழில்நுட்ப ரீதியில் வெடிக்க வைத்த இஸ்ரேல் 42 பேரை கொன்றது. 3500 பேர் படுகாயம் அடைந்தனர். பரஸ்பரம் தாக்குதல் நடந்ததால் பதற்றம் அதிகரித்துள்ளது.

 

The post இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் ஏவுகணைகளை வீசி தாக்குதல்: லெபனானுக்குள் தரைவழித் தாக்குதல் நடத்த இஸ்ரேல் ஆயத்தம் appeared first on Dinakaran.

Related Stories: