தேனியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்: 27ம் தேதி நடக்கிறது

தேனி, செப்.25: தேனி மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் வருகிற 27ம் தேதி தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்க உள்ளது. இது குறித்து கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள தகவலில், தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இம்மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் வருகிற 27ம் தேதி காலை 10 மணியளவில் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடத்தப்பட உள்ளது.

இக்கூட்டத்தில் வேளாண்மைத்துறையால் வேளாண்மை தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கப்பட உள்ளது. தேனி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் அந்தந்த வட்டாரத்தில் உள்ள வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைகள் சம்பந்தமான திட்டங்கள் மற்றும் குறைகளை விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தெரிவிக்கலாம். மேலும், தங்களது கோரிக்கைகளை கலெக்டரிடம் மனுக்களாகவும் அளிக்கலாம். விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் மனுக்கள், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி அதன் மீது தனிக்கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.

The post தேனியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்: 27ம் தேதி நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: