சுயசேவை இயந்திரம் மூலமாக விரைவு பேருந்துகளில் முன்பதிவு திட்டம்: அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

கூடுவாஞ்சேரி: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் என்ற பாதையில், சுயசேவை இயந்திரம் மூலமாக விரைவு பேருந்துகளில் முன்பதிவு செய்யும் திட்டத்தை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் உள்ளது. இங்கிருந்து தினந்தோறும் தென் மாவட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான அரசு பேருந்துகள், அரசு விரைவு பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில், அரசு விரைவு போக்குவரத்து கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் நெடுந்தூர பேருந்துகளுக்கு முன்பதிவு செய்யும் திட்டம் 2006ல் அறிமுகப்படுத்தப்பட்டது.இத்திட்டம் மென்மேலும் வளர்ச்சி பெற்று பயணிகளிடத்தில் வரவேற்பை பெற்றது. இதில், தமிழ்நாடு முதலமைச்சரின் தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் என்ற பாதையில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் அடுத்தகட்டமாக சுயசேவை இயந்திரம் மூலமாக முன்பதிவு செய்யும் திட்டத்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று மாலை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தொடங்கி வைத்தார்.

இந்த சுயசேவை இயந்திரம் வழியாக, எந்த நேரத்திலும் தங்களுக்கு தேவையான பேருந்துகளுக்கு பயணிகள் முன்பதிவு செய்து, மின்னணு முறை வழியாக பயணச்சீட்டை பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டத்தின் மூலம் விரைவாகவும் மற்றும் சுலபமாகவும் எந்த நேரத்திலும் முன்பதிவு செய்யலாம்.மேலும் பயணிகளின் வரவேற்பை பொறுத்து அனைத்து முக்கிய நகரங்களுக்கும் இது விரிவுபடுத்தப்படும்.

60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து கொள்ளலாம். பயணிகள் தங்களுக்கு தேவையான பேருந்து வகை, புறப்படும் நேரம், இருக்கை எண் போன்றவற்றை விருப்பம் போல் தேர்வு செய்யலாம். இதன் மூலம் முன்பதிவு செய்யும் பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.இந்நிகழ்வில், அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் மோகன், பொது மேலாளர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post சுயசேவை இயந்திரம் மூலமாக விரைவு பேருந்துகளில் முன்பதிவு திட்டம்: அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: