இஸ்லாமிய மக்கள் வாழும் பகுதியை பாகிஸ்தான் என விமர்சனம் : பகிரங்க மன்னிப்பு கோரினார் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி !!

பெங்களூரு: இஸ்லாமிய மக்கள் வாழும் பகுதியை பாகிஸ்தான் என குறிப்பிட்டது சர்ச்சையானதை அடுத்து கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி வேதவியாசச்சார் ஸ்ரீஷானந்தா பகிரங்க மன்னிப்பு கோரினார். கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி வேதவியாசச்சர் ஸ்ரீஷானந்தா, நில உரிமையாளர் – குத்தகைதாரர் தொடர்பான ஒரு வழக்கு விசாரணையின்போது, முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பெங்களூருவின் கோரிபாளையா பகுதியை பாகிஸ்தான் என்று கூறியிருந்தார்.அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதே நீதிபதி ஸ்ரீஷானந்தா ஒரு பெண் வழக்கறிஞர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வீடியோவும் வைரலானது. இதையடுத்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. முந்தைய விசாரணையில், இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் உரிய விவரங்களை பெற்று, உச்ச நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிமன்ற விசாரணையின் போது நீதிபதிகள் எத்தகைய கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்பது தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகளை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், இஸ்லாமிய மக்கள் வாழும் பகுதியை பாகிஸ்தான் என குறிப்பிட்டது சர்ச்சையானதை அடுத்து கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி வேதவியாசச்சார் ஸ்ரீஷானந்தா பகிரங்க மன்னிப்பு கோரினார். இதுதொடர்பாக பேசிய நீதிபதி வேதவியாசச்சர் ஸ்ரீஷானந்தா, நீதித்துறை நடவடிக்கைகளின்போது நடந்த சில விஷயங்கள் சமூக வலைதளங்களில் சூழலுக்கு அப்பாற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அது உள்நோக்கத்துடனோ அல்லது யாருடைய மனதையோ அல்லது எந்த குறிப்பிட்ட சமூகத்தையோ புண்படுத்தும் நோக்கத்திலோ தெரிவிக்கப்ப டவில்லை. ஒருவேளை அந்த கருத்தில் யாருடைய மனதும் புண்பட்டிருந்தால் அதற்காக நான் மன்னிப்பு தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

The post இஸ்லாமிய மக்கள் வாழும் பகுதியை பாகிஸ்தான் என விமர்சனம் : பகிரங்க மன்னிப்பு கோரினார் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி !! appeared first on Dinakaran.

Related Stories: