×

முதியவர் தீக்குளிக்க முயற்சி

 

சேலம், செப்.10: சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த எர்ணாபுரம் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜோதி (70). நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்திற்கு வந்த இவர், திடீரென மண்ணெண்ணெயை எடுத்து ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து ஜோதி கூறுகையில், ‘‘நானும், எனது சகோதரரும் சேர்ந்து கான்ட்ராக்ட் தொழில் செய்து வந்தோம். அந்த தொழில் மூலம் வந்த ₹3.40 கோடியை எனது சகோதரர் கையாடல் செய்துவிட்டார். மேலும், சேலம் 3 ரோடு பகுதியில் இருந்த, எனக்கு சொந்தமான 16 ஆயிரம் சதுரடி நிலத்துடன் கூடிய கட்டிடத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்துக்கொண்டனர்.
இதுதொடர்பாக அவரிடம் கேட்டபோது, கொலை மிரட்டல் விடுத்தார்.

மேலும், கடந்த 7ம் தேதி அடியாட்களை அழைத்து வந்து, ஆயுதங்களால் தாக்கி பத்திரத்தில் கையெழுத்து போடுமாறு வற்புறுத்தினார். இதுகுறித்து சங்ககிரி போலீசில் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. அவர் கையாடல் செய்த பணம் மற்றும் அபகரித்த கட்டிடத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார். இதனிடையே மண்ணெண்ணைய் ஊற்றியதால் முதியவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை, சேலம் அரசு மருத்துவனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

The post முதியவர் தீக்குளிக்க முயற்சி appeared first on Dinakaran.

Tags : Salem ,Jyoti ,Ernapuram ,Sangakiri ,Salem district ,
× RELATED திருட்டு வழக்கில் தலைமறைவானவர் கைது