கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் ரூ.10 கோடியில் திறந்தவெளி அரங்கு: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

மதுரை: மதுரை கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்தில், ரூ.10 கோடி செலவில் திறந்தவெளி அரங்கு அமைக்க, விரைவில் பணிகள் தொடங்கும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். மதுரை கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்தில், அமைச்சர் எ.வ.வேலு இன்று காலை ஆய்வு செய்தார். அதன்பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின், குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்கி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

இதனடிப்படையில், மதுரையில் உலகத்தரத்தில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நூலகம் தொடங்கிய கடந்த ஓராண்டில் 11 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர். அவர்களுக்கான வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் நூலகத்தில் பல்வேறு மேம்பாட்டு பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.10 கோடியில் திறந்தவெளி அரங்கு அமைக்க திட்டமிடப்பட்டு, விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டு விரைவில் பணி தொடங்கப்படும். இதேபோல, வாசகர்கள் தாங்கள் கொண்டுவரும் புத்தகங்களை வாசிக்க வசதியாக ரூ.2.40 கோடியில் தனி அரங்கும் அமைக்கப்பட உள்ளது. மேலும், நூலகத்தில் பொதுப்பணித்துறை மூலம் ரூ.40 லட்சத்தில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார். நூலகத்திற்கு கடந்த ஓராண்டில் 11 லட்சம் பேர் வருகை தந்ததையொட்டி அமைச்சர் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதை தொடர்ந்து பொதுப்பணித் துறை மூலம் மேற்கொள்ளப்படும் திட்ட பணி குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. அப்போது, அதிகாரிகள் உடனிருந்தனர்.

The post கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் ரூ.10 கோடியில் திறந்தவெளி அரங்கு: அமைச்சர் எ.வ.வேலு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: