திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 9 வயது சிறுமி சிலம்பம் சுற்றியபடி திருவண்ணாமலையில் கிரிவலம்: உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற முயற்சி

திருவண்ணாமலை, செப். 5: திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 9 வயது சிறுமி, திருவண்ணாமலையில் சிலம்பம் சுற்றியபடி கிரிவலம் சென்று கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறும் முயற்சியை மேற்கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்தவர் கார்த்திகுமார். அவரது மகள் தேஷ்மிதா(9). அங்குள்ள தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கிறார். இவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் சிலம்பம் பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில், திருவண்ணாமலையில் நேற்று சிலம்பம் ஆடியபடி 14 கி.மீ. தூரம் கிரிவலம் சென்று சாதனை முயற்சியை மேற்கொண்டார். அதிகாலை 5.30 மணிக்கு, அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் எதிரில் சிலம்பம் ஆடியபடி கிரிவலத்தை தொடங்கிய மாணவி தேஷ்மிதா, காலை 9.30 மணியளவில் ராஜகோபுரம் முன்பு கிரிவலத்தை நிறைவு செய்தார். கிரிவலத்தின்போது, சிலம்பம், சுருள்வீச்சு, வால்வீச்சு, மான்கொம்பு உள்ளிட்டவைகளை சுழற்றியபடி கிரிவலம் சென்றது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. மாணவி தேஷ்மிதா ஏற்கனவே சிலம்பம் போட்டிகளில் பங்கேற்று மாநில மற்றும் தேசிய அளவில் பல்வேறு பரிசுகளை வென்றிருப்பதாகவும், சாதனை முயற்சி புத்தகங்களில் இடம் பெற்றிருப்பதாகவும் அவரது பெற்றோர் தெரிவித்தனர்.தற்போது, கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறும் முயற்சியாக, திருவண்ணாமலையில் சிலம்பம் ஆடியபடி கிரிவலம் சென்றதாக தெரிவித்தனர்.

The post திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 9 வயது சிறுமி சிலம்பம் சுற்றியபடி திருவண்ணாமலையில் கிரிவலம்: உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற முயற்சி appeared first on Dinakaran.

Related Stories: