குமரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; ஒன்றிய அரசு பள்ளி ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பாய்ந்தது: 15 பேர் அடுத்தடுத்து புகாரால் பரபரப்பு

நாகர்கோவில்: நாகர்கோவிலில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் ஒன்றிய அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். நாகர்கோவில் கோணத்தில் ஒன்றிய அரசுக்கு சொந்தமான கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கு ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராமச்சந்திர சோனி என்பவர் ஓவிய – கலைப்பிரிவு ஆசிரியராக உள்ளார். இவர், மாணவிகளிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வதாக புகார் எழுந்தது. மொத்தம் 15 மாணவிகள் புகார் அளித்திருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் 8ம் வகுப்பு மாணவி ஒருவரிடம், ராமச்சந்திர சோனி மிகவும் மோசமாக நடந்து கொண்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் கூறினர். விசாரணையில் ஏராளமான மாணவிகள் புகார் தெரிவித்ததால், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தொடர் விடுமுறைக்கு பிறகு நேற்று பள்ளி திறக்கப்பட்டது. நாகர்கோவில் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான போலீசார் சென்று ஆசிரியர் ராமச்சந்திர சோனியை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அவரிடம் பல மணி நேரம் விசாரணை நடந்தது. அப்போது ‘நான் எந்த தவறும் செய்யவில்லை. சகஜமாகதான் நடந்து கொண்டேன்’ என்றார். இருப்பினும் பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில் ஆசிரியர் ராமச்சந்திர சோனி மீது போக் சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே ராமச்சந்திர சோனி சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post குமரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; ஒன்றிய அரசு பள்ளி ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பாய்ந்தது: 15 பேர் அடுத்தடுத்து புகாரால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: