×

கன்டெய்னர் வாடகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்வு: வெளிநாடுகளுக்கு தீப்பெட்டி பண்டல்கள் அனுப்புவது நிறுத்தம்; பல ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு; தீப்பெட்டி ஆலைகள் மூடப்படும் அபாயம்

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டியில் 90 சதவீதம் தமிழகத்தில்தான் உற்பத்தியாகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, நெல்லை, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவு தீப்பெட்டி உற்பத்தி நடைபெற்று வருகிறது. அதிலும் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில்தான் அதிக தீப்பெட்டி உற்பத்தி ஆலைகள் இயங்கி வருகின்றன. 90 சதவீதம் பெண்களே தீப்பெட்டி ஆலைகளில் பணிபுரிகின்றனர். நேரடியாகவும், மறைமுகமாகவும் இத்தொழிலை நம்பி சுமார் 6 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர்.

மூலப்பொருட்களின் விலை உயர்வு, தீப்பெட்டியின் விலை அதிகரிப்பால் ஆர்டர்கள் குறைவு, தீப்பெட்டி பண்டல்களின் தேக்கம் என தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் சீன லைட்டர்களின் வருகையால் தீப்பெட்டி உற்பத்தி தொழில் அடியோடு பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒரு சிகரெட் லைட்டர் விற்பனை, 20 தீப்பெட்டிகளின் விற்பனையை பாதிக்கிறது. எனவே சீன லைட்டர்களை தடை செய்ய வேண்டும் என ஒன்றிய, மாநில அரசுகளுக்கு தொடர்ந்து தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ரூ.20க்கு குறைவான பிளாஸ்டிக் லைட்டர்களை இந்தியாவில் விற்க ஒன்றிய அரசு தடை விதித்து நடவடிக்கை எடுத்த போதிலும் கள்ளச்சந்தை வழியாக பிளாஸ்டிக் லைட்டர் கொண்டு வரப்பட்டு விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. இது ஒரு புறமிருக்க தற்போது வெளிநாட்டுக்கு தீப்பெட்டி ஏற்றுமதி செய்ய முடியாமல் தடைபட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம், கன்டெய்னர் விலை ஏற்றம். தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய தீப்பெட்டிகள், தூத்துக்குடி மற்றும் சென்னை துறைமுகங்கள் வழியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்த தீப்பெட்டி பண்டல்களை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்படும் கன்டெய்னர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளதோடு, மறுபுறம் அதன் வாடகை உயர்வு காரணமாக கடந்த 8 மாதங்களாக வெளிநாடுகளுக்கு தீப்பெட்டி ஏற்றுமதி செய்வதில் சுணக்கம் ஏற்பட்டது. தற்போது அது முற்றிலுமாக முடங்கிப்போய் உள்ளது. ஏற்கனவே உள்நாட்டில் பிளாஸ்டிக் லைட்டர்களால் தீப்பெட்டி வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகளுக்கு தீப்பெட்டி ஏற்றுமதி செய்வதும் தடைபட்டு உள்ளதால் மேலும் பாதிப்பு அடையக்கூடிய சூழ்நிலை உருவாகி உள்ளது.

மாதந்தோறும் ரூ.100 கோடி மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள் துறைமுகங்கள் மூலமாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு வந்தது. பிளாஸ்டிக் லைட்டர் பிரச்னை காரணமாக தற்போது வாரத்திற்கு 4 அல்லது 5 நாட்கள் மட்டும்தான் தொழிலாளர்களுக்கு வேலை கிடைத்து வருகிறது. உற்பத்தி செய்த தீப்பெட்டி பண்டல்களை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய முடியவில்லை என்பதால், இனி வேலை நாட்களை குறைக்கலாமா என்று தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

கன்டெய்னருக்கு அதிக விலை கொடுத்து தீப்பெட்டியை விற்பனைக்கு அனுப்பினால் மற்ற நாடுகளை விட இந்தியாவின் தீப்பெட்டி விலை அதிகமாக இருப்பதால் விற்பனை பாதிக்கப்படும். பாகிஸ்தானில் துறைமுகம் வழியாக கொண்டு செல்லப்படும் தீப்பெட்டிகளுக்கு அந்நாட்டு அரசு மானியம் வழங்கி வருகிறது. அதேபோன்று இந்திய அரசும் மானியம் வழங்கினால் நன்றாக இருக்கும் என்பதும் தீப்பெட்டி உற்பத்தியாளர்களின் கோரிக்கையாக உள்ளது. ரூ.16 லட்சம் மதிப்பிலான தீப்பெட்டி பண்டல் கொண்டு செல்வதற்கு கன்டெய்னர் வாடகையாக ரூ.2 லட்சம் வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது 6 முதல் 8 லட்சம் ரூபாயாக வாடகை உயர்த்தப்பட்டுள்ளது.

பொதுவாக தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டிகள் அதிகளவில் ஆப்பிரிக்க நாடுகளில் விற்பனை செய்யப்படுவது வழக்கம். சில நாடுகளில் நடைபெறும் உள்நாட்டுப் போர் காரணமாக கப்பல்கள் வழக்கமான வழியில் செல்லாமல் சுற்றி சொல்ல வேண்டி இருப்பதால், கன்டெய்னர் வாடகை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அதேவேளை இந்த வாடகை உயர்வால் தீப்பெட்டி ஆலைகள் அடியோடு முடங்கி மூடப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது என்று தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

* ‘ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’
நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க செயலாளர் சேதுரத்தினம் கூறுகையில், ஒரு கன்டெய்னருக்கு 600 தீப்பெட்டிகள் கொண்ட 6 ஆயிரம் பண்டல்களை ஏற்றுவார்கள். கடந்த காலத்தில் கன்டெய்னர் வாடகை ஆயிரம் டாலராக இருந்தது. தற்போது 4 ஆயிரம் டாலராக 4 மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் தீப்பெட்டியின் அடக்கச் செலவு அதிகரித்துள்ளது. இதற்கு ஏற்ப விற்பனை விலை கிடைக்கவில்லை. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தீப்பெட்டி பண்டல்களுக்கான ஊக்கத்தொகையை ஒன்றிய அரசு 8 சதவீதத்தில் இருந்து படிப்படியாக குறைத்து தற்போது 1.5 சதவீதமாக மாற்றியுள்ளனர்.

அதேவேளை பாகிஸ்தானில் ஊக்கத்தொகை கொடுக்கிறார்கள். இதனால் வெளிநாடுகளில் அந்நாட்டு தீப்பெட்டி அதிகளவு விற்கிறது. ஏற்கனவே மூலப்பொருட்கள் விலை உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால் தொழிலாளர்களுக்கு சரியான வேலை கொடுக்க முடியவில்லை. இந்நிலையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாமல் தீப்பெட்டி பண்டல்கள் தேக்கமடைந்துள்ளன. எனவே இதுபோன்ற சூழ்நிலைகளால் தீப்பெட்டி தொழிலை நிரந்தரமாக மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

The post கன்டெய்னர் வாடகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்வு: வெளிநாடுகளுக்கு தீப்பெட்டி பண்டல்கள் அனுப்புவது நிறுத்தம்; பல ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு; தீப்பெட்டி ஆலைகள் மூடப்படும் அபாயம் appeared first on Dinakaran.

Tags : India ,Tamil Nadu ,Thoothukudi district ,Kovilpatti ,Nellai ,Thenkasi ,Virudhunagar ,Dinakaran ,
× RELATED கல்வித்துறையில் செயல்படுத்தப்படும்...