இலங்கை கைது நடவடிக்கை தொடர்கிறது மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு வேண்டும்: கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

சோளிங்கர்: இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது வாடிக்கையாக உள்ளது. மீனவர் பிரச்னைக்கு நிச்சயமாக நிரந்தர தீர்வு காண வேண்டும் என மகாராஷ்டிரா கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் மலைக்கோயிலில் மகாராஷ்டிரா மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று தரிசனம் செய்தார். பின்னர் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

வக்பு வாரியத்தினுடைய அதிகாரங்கள் எத்தகையது. எதேச்சதிகார மனப்பான்மை கொண்டவர்களிடத்தில் அது சென்று சேர்ந்துவிடும் என்று சொன்னால் எத்தகைய விளைவுகளை அது ஏற்படுத்தும் என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். எந்த ஒரு சட்டமும் எல்லோருக்கும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டுமே தவிர ஒரு சார்பானதாக இருக்க கூடாது. இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது வாடிக்கையாக உள்ளது.

முந்தைய ஆட்சிக்காலங்களில் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். எல்லாம் நினைத்துப் பார்க்க வேண்டும். தற்போது பல்வேறு அரசியல் சூழ்நிலையிலும் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படாமல் கைது செய்யப்படும்போதும் மிக விரைவாக விடுதலை செய்யப்படுகின்ற சூழல் உள்ளது. கடல் எல்லை சிறிதாக இருப்பதால் அவர்கள் தாங்கள் எல்லை என கூறுகிறார்கள். நாமும் நம் எல்லை என கூறுகிறோம். நிச்சயமாக இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post இலங்கை கைது நடவடிக்கை தொடர்கிறது மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு வேண்டும்: கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: