ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு அஸ்வத்தாமன் என்பவர் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், அவரது தந்தையும் வட சென்னையில் பிரபல ரவுடியாக வலம் வந்தவருமான நாகேந்திரனிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். தற்போது ரவுடி நாகேந்திரன் சிறையில் உள்ள ரவுடி நாகேந்திரனை செம்பியம் போலீஸ் கைது செய்தது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி வீட்டு அருகே நின்று கொண்டிருந்த போது ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை கொடூரமாக வெட்டி சாய்த்து விட்டு தப்பியது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப்பழியாக, அவரது ஆதரவாளர்கள் ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக்கட்டியதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து ஆற்காடு சுரேசின் சகோதரர் பொன்னை பாலு உள்பட 21 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் திருவேங்கடம் என்ற ரவுடி மட்டும் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். இதற்கிடையே, இந்த வழக்கில் நேற்று அதிரடி திருப்பம் ஒன்று ஏற்பட்டது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இளைஞர் காங்கிரஸ் செயலாளர் அஸ்வத்தாமன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இவர் சென்னை வியாசர்பாடி எஸ்.எம். நகரை சேர்ந்தவர். இவருடைய தந்தை பெயர் நாகேந்திரன், வடசென்னை பகுதியில் ஒரு காலத்தில் பெரிய தாதாவாக வலம் வந்தவர். தற்போது, ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் இருக்கிறார். இதனால், நாகேந்திரனும், அஸ்வத்தாமனும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய பங்காக இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசார் மத்தியில் இருந்தது. போலீசார் நடத்திய விசாரணையில், அஸ்வத்தாமனுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து நேற்று அதிரடியாக அஸ்வத்தாமனை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் இன்று பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி நாகேந்திரனை செம்பியம் போலீஸ் கைது செய்தது. ஏற்கனவே மற்றொரு கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் உள்ள ரவுடி நாகேந்திரனை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிலும் கைது செய்தனர். நாகேந்திரனை கைது செய்ய அதற்குண்டான ஆணையை வேலூர் சிறை நிர்வாகத்திடம் செம்பியம் போலீஸ் வழங்கியது.
The post பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி நாகேந்திரனை கைது செய்தது செம்பியம் போலீஸ் appeared first on Dinakaran.