வெளிநாட்டுக்கு படிக்க போறேன்.. தலைவர் பதவில இருந்து தூக்கிடாதீங்கண்ணா…டெல்லி தலைவர்களிடம் கெஞ்சும் அண்ணாமலை

சென்னை: வெளிநாட்டுக்கு படிக்கச் செல்கிறேன். அதனால் தலைவர் பதவியில் தொடர அனுமதிக்க வேண்டும் என்று டெல்லி சென்று தலைவர்களிடம் கோரிக்கை விடுத்து வருகிறார் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை. ஆனால் அவரது கோரிக்கையை ஏற்க தலைவர்கள் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. கடந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜ தலைமையில் தனி அணி அமைத்துப் போட்டியிட்டது. அதில் அதிமுகவை விட அதிக இடங்களில் 2ம் இடம் வருவோம்.

10 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று அண்ணாமலை டெல்லி தலைமையிடம் கூறியிருந்தார். இதனால் அண்ணாமலையை நம்பி 8க்கும் மேற்பட்ட முறை மோடி தமிழகம் வந்து பிரசாரம், வாகனப்பேரணி எல்லாம் நடத்தினார். ஆனால் 21 இடங்களில் பாஜ டெபாசிட் இழந்தது. கூட்டணித் தலைவர்கள் புண்ணியத்தில் பல இடங்களில் 2ம் இடம் பிடித்தது. ஆனால் பாஜவுடன் போட்டியிட்டதால் பாமக பல இடங்களில் டெபாசிட் இழந்ததோடு, தனது வாக்கு வங்கியையும் இழந்தது.

இதனால் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று அண்ணாமலை டெல்லி சென்று தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். தன்னிடம் கடிதம் வாங்க மாட்டார்கள், தொடர்ந்து கட்சிப் பதவிகளில் தொடருங்கள் என்று கூறுவார்கள் என அண்ணாமலை எதிர்பார்த்தார். ஆனால் அண்ணாமலையின் ராஜினாமா கடிதத்தை பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வாங்கிக் கொண்டார். ஆனால் ஏற்றுக் ெகாண்டதாக அறிவிக்கவில்லை.

இதனால் எப்படியும் தன்னை மாற்றிவிடுவார்கள் என்பதை அவரது தீவிர ஆதரவு தலைவரான பி.எல்.சந்தோஷ் மூலம் தெரிந்து கொண்ட அண்ணாமலை, வெளிநாடு சென்று படிக்க விருப்பம் தெரிவிப்பதாக ஒரு பிட்டைப் போட்டார். அதற்காக விண்ணப்பமும் செய்தார். ஆனால் டெல்லி மேலிடமோ அவரை படிக்க அனுமதி அளித்தது. இது அண்ணாமலைக்கு மேலும் அதிர்ச்சியைக் கொடுத்தது. மேலும், அவருக்கு பதிலாக புதிய தலைவரைப் போடலாமா அல்லது பொறுப்பாளர்களைப் போடலாமா என்று ஆலோசித்து வருகிறது.

குறிப்பாக கே.டி.ராகவன், நயினார் நாகேந்திரன், ஆனந்தன் ஆகியோரில் ஒருவரையோ அல்லது இருவரையோ போடலாமா என்றும் ஆலோசித்து வருகிறது. இருவர் என்றால், ஒருவரை மாநில தலைவராகவும், மற்றொருவரை செயல் தலைவராகவும் நியமிக்கலாமா என்றும் ஆலோசித்து வருகிறது. எப்படியும் தன்னை காலி செய்வதில் டெல்லி மேலிடம் உறுதியாக இருப்பதைத் தெரிந்துகொண்ட அண்ணாமலை கடந்த வாரம் டெல்லி சென்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்க விரும்பினார்.

ஆனால் அவர்கள் சந்திக்க மறுத்துவிட்டனர். இதனால் நட்டாவை சந்தித்துப் பேசினார். அப்போது வெளிநாடு சென்று படிப்பது குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, தன்னுடைய ராஜினாமா கடிதத்தை ஏற்காமல், பொறுப்பாளர்களை மட்டும் போடுங்கள். நான் வெளிநாட்டில் இருந்தபடியே கட்சியை கவனித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் கட்சி பெரிய அளவில் வளர்ந்துள்ளது. சட்டப்பேரவை தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால், பல தொகுதிகளில் வெற்றி பெற முடியும்.

இதனால் இந்த நேரத்தில் என்னை மாற்றிவிட்டு கூட்டணி அமைத்தால், மீண்டும் திராவிடக் கட்சிகளின் முதுகில் நாம் செல்ல வேண்டிய நிலைதான் ஏற்படும். கட்சியும் சவலைக்குழந்தையாக மாறிவிடும். இதனால் எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுங்கள். வெளிநாட்டில் இருந்தே கட்சியை மாற்றிக் காட்டுகிறேன் என்று கூறியுள்ளார். இதுபோல எத்தனை மாநில தலைவர்கள் காதில் பூ சுற்றியதை நட்டா பார்த்திருப்பார். அதனால், இந்த விவகாரத்தில் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும் என்று அண்ணாமலையிடம் நட்டா கறாராக கூறிவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அண்ணாமலை தமிழகம் திரும்பி விட்டார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மீண்டும் அண்ணாமலை டெல்லி சென்று பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்களிடம், தன்னை மாற்ற வேண்டாம். வெளிநாட்டில் இருந்தபடியே கட்சியை கவனித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் இருக்கும்போதே கட்சியை வளர்க்க முடியவில்லை.

தன்னை மட்டுமே வளர்த்துக் கொண்டார். வெளிநாட்டில் இருந்தபடி கட்சியை வளர்த்தால், கட்சி வளர்ந்த மாதிரி தான் என மேலிடத் தலைவர்கள் அண்ணமாலையை கிண்டல் செய்யத் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் அண்ணாமலை தொடர் முயற்சியாக டெல்லியில் தனது கோரிக்கையை மூத்த தலைவர்களிடம் வலியுறுத்தி வருகிறார். ஆனால் டெல்லி மேலிடமோ, இவர் எப்போது பெட்டியைக் கட்டுவார், எப்போது புதிய நிர்வாகிகளை நியமிக்கலாம் என்ற ஆலோசனையில் இருப்பதாக கூறப்படுகிறது.

The post வெளிநாட்டுக்கு படிக்க போறேன்.. தலைவர் பதவில இருந்து தூக்கிடாதீங்கண்ணா…டெல்லி தலைவர்களிடம் கெஞ்சும் அண்ணாமலை appeared first on Dinakaran.

Related Stories: