கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை குறைந்தது

அண்ணாநகர்: கோயம்பேடு பூ மார்க்கெட்டில் விசேஷ நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்கள் குறைந்ததால் அனைத்து பூக்களின் விலையில் சரிவு ஏற்பட்டது. சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் வருகின்றன. நேற்று முன்தினம் ஆடிப் பெருக்கை முன்னிட்டு கோயம்பேடு பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லி ரூ.700க்கும், ஐஸ் மல்லி ரூ.600க்கும், முல்லை மற்றும் ஜாதி மல்லி ரூ.500க்கும், கனகாம்பரம் ரூ.1000க்கும், சாமந்தி ரூ.170க்கும், சம்பங்கி ரூ.220க்கும், அரளி பூ ரூ.200க்கும், பன்னீர் ரோஸ் மற்றும் சாக்லேட் ரோஸ் ரூ.140க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு விடிய விடிய மழை பெய்தது. மேலும், விசேஷ நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்கள் இல்லாததால் அனைத்து பூக்களின் விலையிலும் நேற்ற சரிவு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து, நேற்று காலை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லி ரூ.500க்கும், ஐஸ் மல்லி ரூ.350க்கும், முல்லை மற்றும் ஜாதி மல்லி ரூ.300க்கும், கனகாம்பரம் ரூ.550க்கும், அரளி பூ ரூ.150க்கும், பன்னீர் ரோஸ் ரூ.60க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.100க்கும், சாமந்தி ரூ.120க்கும், சம்பங்கி ரூ.90 க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில், ‘‘கோயம்பேடு பூ மார்க்கெட்டில் ஆடி 18 மற்றும் அமாவாசையை முன்னிட்டு அனைத்து பூக்களின் விலையும் உயர்ந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய மழை பெய்து வந்ததாலும் முகூர்த்தம் மற்றும் விசேஷ நாட்கள் குறைந்ததால் அனைத்து பூக்களின் விலை சற்று குறைந்துள்ளது’’ என்றார்.

The post கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை குறைந்தது appeared first on Dinakaran.

Related Stories: