‘வேர்களைத்தேடி’ திட்டத்தில் 15 நாடுகளை சேர்ந்த 100 அயலக தமிழ் இளைஞர்கள் ஆக.15 வரை தமிழக சுற்றுப்பயணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்


சென்னை: “வேர்களைத் தேடி” திட்டத்தின் கீழ் 15 நாடுகளை சேர்ந்த 100 அயலகத் தமிழ் இளைஞர்கள் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 15 தேதி வரையிலான தமிழக சுற்றுப் பயணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். புலம்பெயர்ந்து வாழும் இளைஞர்களை தாய் தமிழ்நாட்டின் மரபின் வேர்களோடு உள்ள தொடர்பை புதுப்பிக்கும் வண்ணமும், தமிழ் கலை பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை அயலகத் தமிழர்களிடையே பரிமாற்றம் செய்யும் வகையிலும், ஆண்டுதோறும் இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து கலை இலக்கிய பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள், அறிஞர்கள் மற்றும் சான்றோர்களுடன் கலந்துரையாடல் என்ற கலாச்சார பரிமாற்ற சுற்றுலாத் திட்டமான “வேர்களைத் தேடி” என்ற திட்டத்தை முதல்வர் 24.5.2023 அன்று சிங்கப்பூரில் நடந்த தமிழ் கலை பண்பாட்டு நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின்படி, அயலகத்தில் வாழும் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்ட தமிழ் இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழ்நாட்டுக்கு வரவழைத்து, தமிழ் மற்றும் தமிழர்களின் பெருமிதங்களை உணரும் வகையில் தமிழ்நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் அழைத்துச் செல்லப்படுவர். அதன் அடிப்படையில் சென்ற ஆண்டு நான்கு நாடுகளைச் சேர்ந்த தமிழ் இளைஞர்களைக் கொண்ட முதற்கட்ட பயணம் மேற்கொள்ளப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, நடப்பு ஆண்டில் இரண்டாம் கட்ட பயணமாக, தென் ஆப்ரிக்கா, உகாண்டா, குவாடலூப், மார்டினிக், பிஜி, இந்தோனேஷியா, மொரீஷியஸ், ஆஸ்திரேலியா, மாலத்தீவு, கனடா, மியான்மர், மலேசியா, இலங்கை. பிரான்சு மற்றும் ஜெர்மனி ஆகிய 15 நாடுகளைச் சேர்ந்த 100 அயலகத் தமிழ் இளைஞர்கள் 1.8.2024 அன்று முதல் 15.8.2024 வரையிலான 15 நாட்களுக்கு தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், 100 அயலகத் தமிழ் இளைஞர்களின் சுற்றுப் பயணத்திற்கு தேவையான துணிமணிகள், பயணக் குறிப்புகள், புத்தகங்கள், அடையாள அட்டை போன்ற பொருட்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி சுற்றுப்பயணத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, பொது மற்றும் மறுவாழ்வுத்துறை செயலாளர் ரீட்டா ஹரிஷ் தக்கர், பொது மற்றும் மறுவாழ்வுத்துறை இணைச் செயலாளர் விஷ்ணு சந்திரன், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post ‘வேர்களைத்தேடி’ திட்டத்தில் 15 நாடுகளை சேர்ந்த 100 அயலக தமிழ் இளைஞர்கள் ஆக.15 வரை தமிழக சுற்றுப்பயணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: