ராகுல் காந்தியின் ஜாதி குறித்து கேள்வி எழுப்பிய ஒன்றிய அமைச்சருக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்: அவையில் மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்!!

டெல்லி: நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியின் சாதி குறித்து கேள்வி எழுப்பிய பாஜக உறுப்பினர் அனுராக் தாக்கூர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி மக்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்ற மக்களவையில் நேற்று சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் தொடர்பாக அனல் பறக்கும் வாதம் நடைபெற்றது. அப்போது மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்; இந்தியா கூட்டணி ஆட்சியில் இதற்கான சட்டம் நிறைவேற்றப்படும் என்றார்.

அப்போது ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர் பேசிய ஒரு வார்த்தை சலசலப்பை ஏற்படுத்தியது. அனுராக் தாகூர் பேசும் போது, “சாதி பற்றி தெரியாதவர்கள் சாதி வாரி கணக்கெடுப்பு குறித்து பேசுகிறார்கள்” என்றார். அனுராக் தாகூர் யாருடையை பெயரையும் குறிப்பிடாமல் இந்த கருத்தை சொன்னாலும் ராகுல் காந்தியை விமர்சிக்கும் விதமாகவே இந்த கருத்து பார்க்கப்பட்டது.

இதற்கு உடனடியாக பதிலடி கொடுத்த எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியே தீருவோம் என்று உறுதியாக கூறினார். அனுராக் தாக்கூர் என்னை துஷ்பிரயோகம் செய்து இழிவுபடுத்தியுள்ளார். அவர்கள் தொடர்ந்து இழிவுபடுத்தட்டும். நான் குரல் கொடுத்து கொண்டுதான் இருப்பேன் என்றார்.

இந்நிலையில் இன்று லோக்சபா கூடியதும் ராகுல் காந்தி குறித்த விமர்சனத்துக்கு அனுராக் தாக்கூர் மன்னிப்பு கேட்க வேண்டும் என இந்தியா கூட்டணி எம்பிக்கள் முழக்கமிட்டனர். அப்போது ஒன்றிய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், ஜோதிராதித்ய சிந்தியா பேச முயற்சித்தனர். ஆனாலும் இந்தியா கூட்டணி எம்பிக்கள் தொடர்ந்து முழக்கம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டது.

The post ராகுல் காந்தியின் ஜாதி குறித்து கேள்வி எழுப்பிய ஒன்றிய அமைச்சருக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்: அவையில் மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்!! appeared first on Dinakaran.

Related Stories: