ஜோதிட ரகசியங்கள்

இறைவன் யாருக்கும் எதையும் கொடுக்காமல் இல்லை. கொடுத்ததை வளர்த்துக் கொள்ளுங்கள்.

ஒரு ஜாதகத்தில் 12 கட்டங்களும் பலமாக இருக்காது. குறிப்பிட்ட ராசியின் பலத்தை அதன் பனிரெண்டாவது ராசி தடுக்கும் என்பது அடிப்படையான ஜோதிடப் பாடம். இதைத் தெரிந்து கொள்வதால் என்ன நன்மை என்று கேட்கலாம். சில விஷயங்களைக் கையாள்வதன் மூலம், நாம் அசுப பலன்களைக் குறைத்துக் கொண்டு சுப பலன்களைப் பெருக்கிக் கொள்ளலாம். ஒரு சின்ன உதாரணம் சொல்லுகின்றேன். சில வருடங்களுக்கு முன், ஒரு தம்பதியினர் வந்தனர். குழந்தை பாக்கியம் தள்ளிக் கொண்டே போனது. காரணம், மனைவிக்கு ஒரு குறையும் இல்லை. கணவனுக்கு ஐந்தாம் பாவத்தைவிட, நான்காம் பாவம் பலமாக இருந்தது. நான்காம் பாவத்தை சுகஸ்தானம், வண்டி வாகன ஸ்தானம், மாத்ரு ஸ்தானம் என்று குறிப்பிடுவார்கள்.

வாகனங்கள் வாங்குவது, அமைவது, வாகனங்கள் மூலம் லாப நஷ்டங்கள், அசையா சொத்துக்கள், காலி மனை இடங்கள், வீடு அமைவது, வாங்குவது, வீடு, காலி இடங்கள் மூலம் வருமானம், லாபம், ஆரம்ப நிலைக்கு அடுத்த நிலை கல்வி, தாய், தாயின்ஆரோக்கியம், ஆதரவு, தாயின் மூலம் வரும் சொத்துக்கள், இதர சுகங்கள், சுகங்களை அனுபவிக்கும் யோகம் நான்காம் பாவத்தின் முக்கிய காரகங்கள்.

நான்காம் பாவமும், பாவாதிபதியும் இருக்கும் வலுவை பொருத்தும், பார்வை செய்யும் கிரகங்களின் சுப பாவ தொடர்புகளை பொருத்தும் மேற்கண்ட காரகங்களின் வாயிலாக ஜாதகருக்கு நன்மை தீமைகள் இருக்கும். கணவனின் ஜாதகத்தில், நான்காம் பாவகம் பலமாக இருப்பதால், அது ஐந்தாம் பாவத்தின் 12 ஆம் பாவமாக செயல்பட்டு ஐந்தாம் பாவத்தின் பலனைத் தடை செய்து கொண்டிருந்தது. ஆனாலும், பெரிய அளவில் புத்ர தோஷம் இல்லை. குரு நன்றாக இருந்தார். நான்காம் பாவம் வலிமை பெற்றால், பெரும்பாலும் ஊர் மாற மாட்டார்கள். வீடு மாற மாட்டார்கள். பெரிய அளவில் பயணங்களை மேற்கொள்ள மாட்டார்கள். நான் இப்பொழுது அவர்களுக்கு ஒரு யோசனை சொன்னேன்.

“நீங்கள் உங்கள் வீட்டை கொஞ்ச நாள் மாற்றிக் கொள்ளுங்கள். வாய்ப்பு கிடைக்கும்’’ அப்பொழுது கணவனுக்கு மூன்றாம் பாவத்தின் புத்தி நடந்து கொண்டிருந்தது. கோச்சாரமும் கொஞ்சம் சாதகமாக இருந்தது. நேரம் நன்றாக இருந்ததால், இந்த யோசனையை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அவர்கள் கொஞ்ச நாள் வேறு வீட்டில் இருக்கலாம் என்று நினைத்து வீடு மாறினார்கள். வீடு மாறிய சில மாதங்களில் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது. நான்காம் பாவத்தை உடைப்பது மூன்றாம் பாவம் மூன்றாம் பாவம் என்பது பிரயாணம் வீடு. மாற்றங்கள் போன்றவற்றைக் குறிப்பது. இப்பொழுது நாம் வீடு மாற்றம் செய்வதன் மூலமாக மூன்றாம் பாவத்தைப் பலப்படுத்துகின்றோம்.

மூன்றாம் பாவம் பலமாகும் பொழுது, நான்காம் பாவத்தை கொஞ்சம் கட்டுப்படுத்தும். 4ம் பாவத்தைக் கட்டுப்படுத்துகின்ற பொழுது ஐந்தாம் பாவம் வலிமை பெறும். ஐந்தாம் பாவம் வலிமை பெறுகின்ற பொழுது குழந்தை பாக்கியத்திற்கான வாய்ப்பு சற்று பிரகாசமாக இருக்கும். அதற்குத் தோதாக தசாபுத்தியும் கோச்சாரமும் நடந்தால், நிச்சயம் அவர்களுக்கு குழந்தை கிடைத்துவிடும். இது போலவே சில சின்ன வழிமுறைகளையும் வாழ்க்கை மாற்றங்களையும் கையாண்டு, நமக்கு வருகின்ற சிரமங்களைக் குறைத்துக் கொள்ளலாம்.

உதாரணமாக, 11-ம் பாவம் என்பது நம்முடைய அபிலாசைகள் பிரயாணங்கள், ஜாலியாக இருப்பது, நண்பர்களோடு அரட்டை அடிப்பது முதலிய பல விஷயங்கள் அடங்கியது. இந்த பதினோராவது பாவத்துக்கு பன்னிரண்டாம் பாவமாக பத்தாம் பாவகம் அமையும். 10ம் பாவம் பலப்பட்டு இருப்பதால், தொழில் கவனங்கள் இருக்குமே தவிர, என்டர்டைன்மெண்ட் இருக்காது. நண்பர்களோடு பேசுவதற்கோ, பயணங்களை மேற்கொண்டு ஜாலியாக இருப்பதற்கோ தடை இருக்கும். இதில் இன்னொரு விசேஷம் பாருங்கள்; இப்பொழுது பதினொன்றாம் பாவம் மிக வீரியமாக இருக்கிறது. பத்தாம் பாவம் அந்த வீரியத்தை தாங்கும் வலிமை இல்லை என்று சொன்னால், அவர்கள் ஜாலியாக இருப்பார்கள். பயணங்கள் செய்வார்கள். நட்பு பலமாக இருக்கும். ஆனால் தொழில் அடிபட்டிருக்கும். சிலருக்கு கௌரவம் அடிபட்டிருக்கும். உத்தியோகத்தில் நல்ல பெயர் இருக்காது.

சிலருக்கு ஜீவனோபாயமே இல்லாமல் அங்கங்கே வெட்டி வேலையாய் அலைந்து கொண்டிருப்பார்கள். பைசா பிரயோஜனம் இருக்காது. யாரோ நண்பர்கள் உதவி செய்து கொண்டிருப்பார்கள். இதே பதினோராம் பாவம், 12ஆம் பாவத்தின் 12 ஆம் பாவமாகவும் இருப்பதை கவனிக்க வேண்டும். அப்படியானால், 12 ஆம் பாவத்தின் சில விஷயங்களையும் தடுக்கும். குறிப்பாக 12 ஆம் பாவம் என்பது நீண்ட காலமாக நோய் நொடியில், மருத்துவமனையில் தங்கி இருப்பது என்று எடுத்துக் கொண்டால் இந்த 11ஆம் பாவம் வலிமை பெற்ற மனிதர்கள் உடல் நிலையில் எந்தக் கோளாறும் இல்லாமல் மருத்துவமனையில் வாழ்க்கையில் ஒருநாள்கூட தங்க மாட்டார்கள்.

அப்படிப்பட்ட ஒரு அபாரமான ஆரோக்கியம் அவர்களுக்கு இருக்கும். தொழில்தான் இருக்காதே தவிர, பாக்கி விஷயங்களெல்லாம் இருக்கும். ஏன், சிலருக்கு இரண்டு மனைவிகள்கூட இந்த 11 ஆம் பாவத்தின் வீரியம் தந்துவிடும். நான் அச்சகம் நடத்திக் கொண்டிருந்த போது, வேலை செய்து கொண்டிருந்த ஒருவர், மாதத்தில் 10 நாள்கள்தான் வேலைக்கு வருவார். மற்ற நாள்களில் எங்காவது ஊர் சுற்றிக் கொண்டிருப்பார். அவருக்கு இரண்டு மனைவிகள். அவர்கள் நூறு நாள் வேலை பார்த்து குடும்பம் நடந்து கொண்டிருந்தது.

இந்த 11ம் பாவத்துக்குத் துணை புரிவதுதான் ஐந்தாம் பாவம். 11ஆம் பாவமும், ஐந்தாம் பாவமும் கிட்டத்தட்ட ஒரே நிலையைக் குறிப்பதுதான். ஐந்தாம் பாவம் காதல், நட்பு, ஜாலி என்றால் பதினோராம் பாவம் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வது, லாபம் பெறுவது, இரண்டாவது திருமணம் என்றெல்லாம் வரும்.

11ஆம் பாவம் வலிமை பெற்று, ஐந்தாம் பாவத்துக்கு தொடர்பு கிடைத்தால், 6ம் பாவம் கெடும். ஆறாம் பாவம் என்பது வேலை அல்லவா! ஐந்தாம் பாவம் என்பது எந்த வேலையும் செய்யாமல் ஏதாவது ஒரு இடத்தில் சுற்றிக் கொண்டிருப்பது. ஆறாம் பாவம் உழைப்பையும், கடுமையான வேலையையும் குறிக்கும். ஆறாம் பாவமான வேலையும், உழைப்பும் கெட்டிருப்பவர்கள் அல்லது அதை செய்யாமல் இருப்பவர்கள்தான் ஐந்தாம் பாவத்தினுடைய பலனான ஊர் சுற்றுதல், ஜாலியாக இருத்தல் முதலியவற்றை அனுபவிப்பார்கள். இந்த நுட்பத்தை நாம் புரிந்து கொண்டு, நம்முடைய ஜாதக பலனைத் தெரிந்து கொள்ள வேண்டும். கடைசியாக சொல்வது இதைத்தான். இறைவன் எல்லோருக்கும் எல்லாவற்றையும் கொடுத்து அனுப்பிவிடவில்லை. யாருக்கும் எதையும் கொடுக்காமல் இருந்துவிடவும் இல்லை. கொடுத்ததை வளர்த்துக் கொள்ளுங்கள். கொடுக்காமல் இருப்பதை, கொடுத்ததை வைத்துக் கொண்டு பெறப் பாருங்கள்.

The post ஜோதிட ரகசியங்கள் appeared first on Dinakaran.

Related Stories: