திருவிதாங்கோட்டில் நடந்த பிளம்பர் கொலையில் நண்பர் கைது 2 நாட்களுக்கு பின் உடலை வாங்கி சென்றனர்

குமாரபுரம், ஜூலை 24: திருவிதாங்கோட்டில் நடந்த பிளம்பர் கொலையில் அவரது நண்பர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் உறுதி அளித்ததை தொடர்ந்து 2 நாட்களுக்கு பின், கொலை செய்யப்பட்ட பிளம்பர் உடலை உறவினர்கள் வாங்கி சென்றனர். குமரி மாவட்டம் தக்கலை அடுத்த திருவிதாங்கோடு அண்ணாநகர் காலனியை சேர்ந்தவர் மகேஷ் (37). பிளம்பர். ஏற்கனவே திருமணமாகி முதல் மனைவி பிரிந்து சென்று விட்டார். பின்னர், வெளிநாடு சென்ற மகேஷ், அங்கு பியூட்டி பார்லரில் வேலை பார்த்து வந்த சென்னை வடபழனியை சேர்ந்த சோபி என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.

பின்னர் அவருடன் ஊருக்கு வந்து வாடகை வீட்டில் வசித்து வந்தார். கடந்த 20ம்தேதி சோபி, சென்னைக்கு செல்ல, வீட்டில் தனியாக இருந்த மகேஷ், தனது நண்பர்களை அழைத்து மது விருந்து அளித்தார். இந்த நிலையில் மறுநாள் காலை கழுத்தறுக்கப்பட்டு மகேஷ் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மகேஷ் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் நடத்திய விசாரணையில் மது விருந்துக்கு வந்த மகேசின் நண்பர்கள் திருவிதாங்கோடு மல்லன்விளையை சேர்ந்த பெனிட் (27), திக்கணங்கோடு பொற்றை காட்டுவிளையை சேர்ந்த திரேன்ஸ் (23), மல்லன்விளையை சேர்ந்த பிபின் ஜேக்கப் (23) ஆகிய 3 பேர் சேர்ந்து மகேசை கொலை செய்தது தெரிய வந்தது.

பெனிட் தாயாரை, மகேஷ் அவதூறாக பேசி உள்ளார். இதை கண்டித்த போது ஏற்பட்ட தகராறில் கொலை நடந்தது தெரிய வந்தது. கொலை தொடர்பாக 3 பேரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். கொலையாளிகளை கைது செய்யும் வரை மகேஷ் உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் கூறினர். இதனால் மகேஷ் உடல் பிரேத பரிசோதனை முடிந்து, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ளது. இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக தேடப்பட்டு வந்தவர்களில் பிபின் ஜேக்கப் என்பவரை தனிப்படை போலீசார் நேற்று தக்கலை அருகே வைத்து கைது செய்தனர். மற்ற 2 பேரை தொடர்ந்து தேடி வருகிறார்கள். அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து நேற்று காலை மகேஷ் உடலை உறவினர்கள் வாங்கி சென்றனர். 2 நாட்களுக்கு பின் உடல் ஒப்படைக்கப்பட்டது.

The post திருவிதாங்கோட்டில் நடந்த பிளம்பர் கொலையில் நண்பர் கைது 2 நாட்களுக்கு பின் உடலை வாங்கி சென்றனர் appeared first on Dinakaran.

Related Stories: