பீகாரில் கனமழை காரணமாக மீண்டும் ஒரு பாலம் சரிந்து விபத்து : ஒரே மாதத்தில் இடிந்து விழுந்த 15வது பாலம் இதுவாகும்!!

பாட்னா : பீகாரில் கனமழை காரணமாக மீண்டும் ஒரு பாலம் சரிந்து விழுந்துள்ளது. அடுத்தடுத்து பாலங்கள் இடிந்து விழுவதால் நிதிஷ் குமார் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வடமாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், ஆற்றின் மேலே கட்டப்பட்ட பாலங்கள் இடிந்து விழுவது அங்கு தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் அராரியா மாவட்டத்தின் ஃபோர்பேஸ்கஞ்ச் தொகுதியில் உள்ள அம்ஹாரா கிராமத்தில் பர்மன் ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த பாலம் இடிந்து விழுந்திருக்கிறது. கடந்த 2008-2009 காலத்தில் கட்டப்பட்ட இந்த பாலம், 2017ல் ஏற்பட்ட வெள்ளத்தில் முற்றிலும் சேதமடைந்து மக்கள் பயன்படுத்த தகுதியற்றது என அறிவிக்கப்பட்டது.

அதன்பின் 2021ல் புனரமைக்கப்பட்டு 2022ம் ஆண்டு மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. புனரமைப்பு பணிகள் நடந்து 2 ஆண்டுகளிலேயே மீண்டும் பாலம் இடிந்து விழுந்துள்ளது. பீகாரில் ஒரே மாதத்தில் இடிந்து விழுந்த 15வது பாலம் இதுவாகும். ஏற்கனவே பாலம் சரிந்த விவகாரத்தில் 15 பொறியாளர்களை பீகார் அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது. இருப்பினும் அடுத்தடுத்து பாலங்கள் சரிந்து விழுந்து இருப்பது பெரும் சர்ச்சையாக உருமாறியுள்ளது. பாலங்கள் சரிந்து விபத்துக்குள்ளானது குறித்து உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.

The post பீகாரில் கனமழை காரணமாக மீண்டும் ஒரு பாலம் சரிந்து விபத்து : ஒரே மாதத்தில் இடிந்து விழுந்த 15வது பாலம் இதுவாகும்!! appeared first on Dinakaran.

Related Stories: