இலவச வீட்டு மனை பட்டா வேண்டும்: கலெக்டரிடம் நாட்டுப்புற கலைஞர்கள் மனு

 

காஞ்சிபுரம் : தமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் நல சங்கத்தின் தலைவர் பெ.கலைச்செல்வன் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகனை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:  ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம் வட்டத்தில் 200க்கும் மேற்பட்ட நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பலர் வாடகை வீட்டில் குடியிருந்து வருகின்றனர். தமிழகத்தின் பாரம்பரியத்தை பாதுகாத்து மக்கள் நாட்டுப்புற கலையை பறைசாற்றி வருகின்றனர்.

இந்த கலைஞர்கள் வாழ்வாதாரம் இன்றி விழா காலங்களில் நாடக மற்றும் கலைச் நிகழ்ச்சிகள் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து மிகவும் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர். எங்களுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. ஆகவே வறுமையில் வாழும் நலிந்த கலைஞர்களுக்கு தமிழக அரசு வழங்கும் இலவச வீட்டு மனை பட்டாவை வழங்கி அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம். அதேபோல அருகில் உள்ள மாவட்டங்களான திருவள்ளூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்களுக்கும் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

The post இலவச வீட்டு மனை பட்டா வேண்டும்: கலெக்டரிடம் நாட்டுப்புற கலைஞர்கள் மனு appeared first on Dinakaran.

Related Stories: