அதிமுக ஒன்று சேர வேண்டும் என்றால் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இபிஎஸ் தலைமையை ஏற்றால் பரிசீலிப்போம்: முன்னாள் அமைச்சர் கண்டிஷன்

அணைக்கட்டு: அதிமுக ஒன்று சேர வேண்டும் என்றால் சசிகலா, ஓபிஎஸ் ஆகியோர் இபிஎஸ் தலைமையை ஏற்றால் பரிசீலிப்போம் என்று முன்னாள் அமைச்சர் கண்டிஷன் கே.சி.வீரமணி தெரிவித்து உள்ளார். வேலூர் அடுத்த ஊசூரில் நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுக பல பிரிவுகளாக பிரிந்தது. இந்த சூழலில் அப்போது ஒன்றிய அரசான பாஜகவை எங்களால் எதிர்க்க முடியவில்லை. மக்களின் நலனுக்காகவும், தமிழ்நாட்டின் திட்டங்களுக்காகவும், தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காகவும் அவர்களோடு அனுசரித்துப் போக வேண்டிய சூழ்நிலை உருவானது. பாஜகவும் அதிமுகவிற்கு உறுதுணையாக இருந்தார்கள்.

அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என எந்த தொண்டன் கூறுகிறான்? எப்படி ஒருங்கிணைக்க வேண்டும் என கூறுகிறீர்கள்? ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கையை தான் நாங்கள் முன் வைத்தோம். அப்போது தான் ஜெயலலிதா இருந்தது போல் செயல்பட முடியும் எனக் கூறினோம். ஆனால் ஓபிஎஸ் உட்பட ஒரு சிலர் அவர்களாகவே தான் வெளியே போனார்கள். நாங்கள் யாரையும் போக சொல்லவில்லை. நீங்கள் குறிப்பிட்டது போல் இவர்களை எந்த அடிப்படையில் சேர்த்துக் கொள்ள சொல்கிறீர்கள். வெளியில் இருப்பவர்கள் தான் பாஜகவுக்கு சாதகமாக அதிமுக கட்சிக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள். வேறு, வேறு கூட்டணியில் நின்று தோல்வியுற்ற பிறகு ஒருங்கிணைக்க வேண்டும் என்ற கருத்தை முன் வைக்கிறார்கள்.

இப்போது அவர்கள் தான் சொல்ல வேண்டும். நாங்கள் ஆதரவு தருகிறோம், எப்போது தேவைப்பட்டாலும் உங்கள் அழைப்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம். எடப்பாடி தலைமையிலான அதிமுகவிற்கு எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு என்று சசிகலா, ஓபிஎஸ் உட்பட பிரிந்து போன அனைவரும் சொல்ல வேண்டும். இப்போது கட்சியை ஒருங்கிணைக்க வேண்டும் என அறிக்கை விடுபவர்கள், எடப்பாடி தலைமையில் நாங்கள் ஒருங்கிணைய தயாராக இருக்கிறோம் என அறிக்கை விட வேண்டும். எடப்பாடி தலைமையில் நாங்கள் அனைவரும் செயல்பட தயாராக வருகிறோம் என அவர்கள் சொல்ல வேண்டும். ஆனால் ஒன்று சேர வேண்டும், ஒன்று சேர வேண்டும் என கூறுகிறார்கள். அப்படி என்றால் அவர்களிடம் தலைமையை கொடுக்க சொல்கிறார்களா என எங்களுக்கு புரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

The post அதிமுக ஒன்று சேர வேண்டும் என்றால் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இபிஎஸ் தலைமையை ஏற்றால் பரிசீலிப்போம்: முன்னாள் அமைச்சர் கண்டிஷன் appeared first on Dinakaran.

Related Stories: