முதல்நாளிலேயே அனைத்து பள்ளிகளுக்கும் இந்த கல்வி ஆண்டில் 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான முதல் பருவ விலையில்லா பாடப்புத்தகம், 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான முழுமையான பாடப்புத்தகங்கள் அச்சிட்டு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கிருந்து பள்ளிகளுக்கு அவை விநியோகம் செய்யப்பட்டன. அதேபோல சீருடை, விலையில்லா நோட்டுகள், காலணிகளும் விநியோகம் செய்யப்பட்டு, பள்ளி திறக்கும் நாளான நேற்று முறைப்படி மாணவ, மாணவிகளுக்கு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதையடுத்து, நேற்று காலை 9 மணி அளவில் 37 ஆயிரத்து 576 அரசு பள்ளிகளும், பிற வகை பள்ளிகளும் திறக்கப்பட்டு, இறை வணக்கத்துடன் வகுப்புகள் தொடங்கின. முதல் நாளான நேற்ற தமிழ்நாடு முழுவதும் அனைத்து வகை பள்ளிகளிலும் சுமார் 80 லட்சம் மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு வருகை தந்தனர். முதல்நாளே ஆசிரியர்களும் மாணவர்களுக்கு பாடங்களை நடத்தினர். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் மாணவ, மாணவியருக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் என சுமார் 6 கோடியே 50 லட்சம் விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
* “இக்கல்வியாண்டு இனிதே அமைய வாழ்த்துகிறேன்”
கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளிகள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளி திரும்பும் குழந்தைகள் அனைவருக்கும் இக்கல்வியாண்டு இனிதே அமைய வாழ்த்துகிறேன். பெற்றோர்களும், ஆசிரியர்களும் மீண்டும் வகுப்பறைக்குள் அடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்களின் மனநிலை, உடல்நிலை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, வாசிப்பிலும் விளையாட்டிலும் மாணவர்களுக்கு ஊக்கமூட்டி மகிழ்ச்சியோடு இருக்கும்படி பார்த்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு: முதல்நாளில் சுமார் 80 லட்சம் மாணவ, மாணவிகள் வருகை appeared first on Dinakaran.