தூத்துக்குடி அருகே தட்டப்பாறையில் செம்மண், கருங்கல் கடத்திய 2 பேர் கைது

*3 யூனிட் செம்மண், 2 யூனிட் கருங்கல், 2 லாரி பறிமுதல்

தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே தட்டப்பாறையில் இருவேறு இடங்களில் சட்ட விரோதமாக செம்மண், கருங்கல் கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 3 யூனிட் செம்மண், 2 யூனிட் கருங்கல் மற்றும் 2 லாரிகளை பறிமுதல் செய்தனர்.தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் பிரபு தலைமையிலான வருவாய் துறையினர் நேற்று முன்தினம் தட்டப்பாறை வடக்கு சிலுக்கன்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக சந்தேகப்படும்படி வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தூத்துக்குடி மறவன்மடம் ராமநாச்சியார்புரம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் மாரிமுத்து (36) மற்றும் சிலர் சேர்ந்து லாரியில் சட்டவிரோதமாக, எவ்வித அனுமதியுமின்றி செம்மண் கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதேபோன்று மேலதட்டப்பாறை பேருரணி ரோடு ஜங்ஷன் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், தெற்கு சிலுக்கன்பட்டி மேற்கு தெருவைச் சேர்ந்த முத்துசாமி மகன் நடராஜபெருமாள்(43) மற்றும் சிலர் சேர்ந்து அனுமதியின்றி கருங்கல்லை கடத்தி சென்றதும் தெரியவந்தது.

இதுகுறித்து தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் பிரபு அளித்த புகாரின்பேரில் தட்டப்பாறை எஸ்ஐ குமரேசன் வழக்குப்பதிந்து, மாரிமுத்து, நடராஜபெருமாள் ஆகிய 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள 3 யூனிட் செம்மண், ரூ.4 ஆயிரத்து 500 மதிப்புள்ள 2 யூனிட் கருங்கல் ஆகியவற்றையும், மணல் மற்றும் கருங்கல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.

The post தூத்துக்குடி அருகே தட்டப்பாறையில் செம்மண், கருங்கல் கடத்திய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: