கோவில்பட்டி அருகே நின்ற லாரி மீது பைக் மோதி வாலிபர் பலி

கோவில்பட்டி, ஜூன் 9: கோவில்பட்டி அருகே உள்ள சிதம்பராபுரத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி மகன் கண்ணன் (27), தொழிலாளி. இவரது மனைவி கலாபாரதி. குடும்ப பிரச்னை காரணமாக கலாபாரதி, கணவரை பிரிந்து 2018ம் ஆண்டு முதல் பெற்றோருடன் வசித்து வருகிறார். இதனால் கண்ணன், தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கண்ணன், கோவில்பட்டி காய்கறி மார்க்கெட்டிற்கு சென்று பொருட்கள் வாங்கிக்கொண்டு பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார். இதனிடையே கோவில்பட்டி அருகே சிதம்பராபுரத்தில் சாலையோரம் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் மற்றும் கிளீனர் அருகில் உள்ள கடைக்கு சென்றிருந்தனர். அப்போது கண்ணன் ஓட்டிச்சென்ற பைக், எதிர்பாராதவிதமாக சாலையோரம் நின்ற லாரியின் பின்னால் மோதியது. இதில் கண்ணன், தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து நாலாட்டின்புத்தூர் எஸ்ஐ ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லாரி மீது பைக் மோதிய சம்பவத்தில் கண்ணன் பலியானதை தொடர்ந்து லாரி டிரைவர், கிளீனர் அங்கிருந்து தப்பினர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கோவில்பட்டி அருகே நின்ற லாரி மீது பைக் மோதி வாலிபர் பலி appeared first on Dinakaran.

Related Stories: