எலி பேஸ்ட் சாப்பிட்ட 4 குழந்தைகள் அட்மிட்

கடலூர்: விருத்தாசலம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 குழந்தைகள் பல் விளக்கும் பேஸ்ட் என நினைத்து எலி பேஸ்ட் சாப்பிட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே கொட்டாரக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (33). இவருக்கு அனுஷ்கா (3) பாலமித்திரன் (2) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அக் கிராமத்தில் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வந்து. இந்த திருவிழாவில் கலந்துகொள்ள மணிகண்டனின் தங்கை அறிவழகி தனது மகள்கள் லாவண்யா(5), ராஷ்மிதா(2) ஆகியோருடன் வந்திருந்தார்.

நேற்று இரவு மணிகண்டனின் பிள்ளைகள் அனுஷ்கா (3) பாலமித்திரன் அறிவழகியின் மகள்கள் லாவண்யா, ராஷ்மிதா ஆகியோர் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது வீட்டில் இருந்த எலி பேஸ்ட்டை, பல் துலக்கும் பேஸ்ட் என நினைத்து வாயில் வைத்து விளையாடி கொண்டிருந்தனர், அதனைப் பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அருகிலுள்ள விருத்தாச்சலம் அரச மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அடுத்த அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து ஆலடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் வீட்டிலிருந்த எலி பேஸ்ட்டை சாப்பிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post எலி பேஸ்ட் சாப்பிட்ட 4 குழந்தைகள் அட்மிட் appeared first on Dinakaran.

Related Stories: