முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயலும் பிரதமர் மோடியின் ஒப்புதல் வாக்குமூலம் : அமைச்சர் மனோ தங்கராஜ் தாக்கு

சென்னை : அதானி, அம்பானியிடம் கருப்பு பணம் இருப்பது தெரிந்தும் அதை மீட்க பிரதமர் மோடி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். தெலங்கானாவில் உள்ள வேமுலாவாடாவில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில்,‘‘ காங்கிரசின் இளவரசர்(ராகுல் காந்தி) கடந்த 5 ஆண்டுகளாக ஒன்றிய அரசுக்கும் அதானி அம்பானிக்கும் ரகசிய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதா என்பது உள்பட பல விஷயங்கள் பற்றி கேள்வி எழுப்பி கொண்டிருந்தார். ஆனால், திடீரென அதானி மற்றும் அம்பானியை விமர்சிப்பதை ராகுல்காந்தி நிறுத்தி விட்டது ஏன்?.

2 தொழிலதிபர்களிடம் இருந்தும் ராகுல் காந்தி எவ்வளவு பணம் பெற்றார் என்பதை அறிய விரும்புகிறேன். அதானி, அம்பானியிடம் இருந்து டெம்போக்கள் நிறைய கறுப்பு பணம் காங்கிரசுக்கு வந்து சேர்ந்து விட்டதா. அவர்களுக்கு இடையில் என்ன ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. 5 வருடங்களாக என்னை விமர்சித்து வந்தீர்கள். திடீரென அவர்களை தாக்குவதை நிறுத்தியது எதனால்?. எத்தனை கட்டுக்கள் கறுப்பு பணம் வாங்கினீர்கள். இது பற்றி நாட்டு மக்களுக்கு பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு மோடி பேசினார். கறுப்பு பணத்தை ஒழித்து விட்டதாக கூறிவிட்டு, தற்போது அதானி, அம்பானியிடம் கறுப்பு பணம் இருப்பதாக பிரதமர் மோடியே கூறியிருப்பது குறித்து நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.இதனிடையே தொழிலதிபர்கள் அதானி, அம்பானியிடம் டெம்போவில் பணம் வாங்கித்தான் பழக்கமா என்று மோடிக்கு ராகுல்காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

இந்த நிலையில், தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள பதிவில்,”முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயலும் பிரதமர் மோடியின் ஒப்புதல் வாக்குமூலம். அதானி, அம்பானியிடம் இருந்து காங்கிரஸ் எவ்வளவு கறுப்புப் பணத்தை பெற்றது என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். அதானி, அம்பானியிடம் கருப்பு பணம் இருப்பது தெரிந்தும் அதை மீட்க பிரதமர் மோடி
ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனை எல்லாம் எதிர்கட்சிகளுக்கு மட்டும் தான் அதானி, அம்பானிக்கு பொருந்தாது என இதன் மூலம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயலும் பிரதமர் மோடியின் ஒப்புதல் வாக்குமூலம் : அமைச்சர் மனோ தங்கராஜ் தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: