கிழமைகள் தரும் கீர்த்தி

குறுக்கை தும்பிக்கையான்

திருப்பனந்தாள் சீர்காழி பேருந்து தடத்தில் உள்ள மணல்மேட்டிலிருந்து 7 கி.மி. தொலைவில் உள்ளது. குறுக்கை என்ற தலம். இங்குள்ள வனதுர்க்கை ஆலயம் பிராகாரத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார் வலம்புரி விநாயகர். தன்னை நாடிவரும் கன்னியர்களின் மனம்போல் மாங்கல்யம் அமையவும், அவர்களின் இல்லறம் சிறக்கவும் அருள்புரியக் கூடியவர் இந்த
தும்பிக்கையான்.

நீதி அருளும் சத்யவரதர்

சென்னை, அரும்பாக்கத்தில், 1970-களில் பாழடைந்து கிடந்த ஒரு மண்டபத்தில் பொது மக்களால் கண்டெடுக்கப்பட்டார் சத்ய வரதராஜர். 750 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஊர் சத்யபுரி என்றும், தமிழில் அறம்பாக்கம் என்றானதாகவும் கூறுகிறார்கள். பிரயோக சக்கரமேந்தி வீற்றிருக்கும் இவரிடம் தீராத வழக்குகளை கொண்டு சென்றால் நம் பக்கம் நியாயம் உள்ள பட்சத்தில் வெற்றி நிச்சயம் என்கிறார்கள். தர்மத்தைக் காக்கும் நீதிபதியாக நிகழ்வதால் இவர் சத்யவரதர். அன்னையின் திருநாமம் பெருந்தேவி தாயார். இத்தலத்தில் உள்ள சுதர்சனருக்கு, நெய்தீபம் ஏற்றி 11 நாட்கள் வணங்கினால், காரியத்தடைகள் நீங்கும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேடு – அரும்பாக்கம் இணைப்பிலிருந்து கிழக்கே 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்த ஆலயம்.

பகைகள் போக்கும் பகலவன்

கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் ஆடுதுறையை அடுத்து அமைந்துள்ளது சூரிய பரிகார தலமான ‘சூரியனார் கோயில்’. மேற்கு நோக்கி அமைந்துள்ள இத்திருக்கோயிலின் 50 அடி உயர ராஜ கோபுரம் மூன்று நிலைகளையும், ஐந்து கலசங்களையும் கொண்டது, கோபுரத்தில் எழில்மிகு புராணச் செய்திகள் சுதைச் சிற்பங்களாக வடிவமைக்கப் பட்டுள்ளன. ஒரே பிராகாரமும், நாற்புறங்களிலும் நெடும் மதில் சுவர்களையும் உடைய ஆலயத்தின் மத்தியில் அமைந்துள்ள கர்ப்ப கிரகத்தில் மூலவராக ‘சூரிய தேவன்’ இடப்புறம் உஷா தேவியுடனும், வலபுறம் சாயா தேவியான பிரத்யுஷா தேவியுடனும் தன் இரு கைகளில் செந்தாமரை மலர்கள் ஏந்தி மலர்ந்த முகத்துடன் காட்சி தருகிறார். இவர், தன்னை வழிபடுபவரது பகையையும் கவலைகளையும் போக்குகிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கிழமைகள் தரும் கீர்த்தி

வாங்கிய கடனில் கொஞ்சமாவது செவ்வாய்க்கிழமை அன்று தந்தால், கடன் விரைவில் அடையும். ஞாயிறு, வியாழக்கிழமைகளில் நோய்க்கு மருந்து சாப்பிட சீக்கிரம் குணமாகும். அறுவை சிகிச்சை செய்பவர் தேய்பிறையில் செய்தால் சுகமாக வீடு திரும்புவர். ‘சனிக் கோடி தனக் கோடி’ என்பது பழமொழி. சனிக்கிழமை நாம் செய்யும் வழிபாடு நமக்கு நன்மைகளைத் தொடர்ச்சியாகத் தரும். சனி பகவான், பெருமாள், ஐயப்பனுக்கு பூஜை செய்ய சனிக்கிழமை ஏற்ற நாளாகும். சனிக் கிழமை அதிகாலையில் விநாயகப் பெருமானையும், பகலில் விஷ்ணுவையும், மாலையில் அனுமனையும் வழிபட காரியத்தடை அகலும்.

கம்பளிப் போர்வையில் அபிஷேகம்

திருவையாறு பஞ்ச நதீஸ்வரர் கோயிலில் நடைபெறும் மாசிமக அபிஷேகம் விசேஷமானது. அந்த அபிஷேகத்தின் போது நெய்யில் நனைத்த கம்பளிப் போர்வை ஒன்றை சிவலிங்கத்தை சுற்றி போர்த்திவிடுவர். அதன்பின் பூஜைகள் நடக்கும். இந்த அபிஷேகத்தை தரிசித்தவர்கள் நோய்கள் நீங்கி பூரண ஆரோக்கியம் பெறுவர் என்பது ஐதீகம்.

தீபமில்லாத விளக்கு

வேலூர் ஜலகண்டேசுவரர் ஆலயத்தில் மும்மூர்த்திகளும், முப்பெருந்தேவியரும் காட்சி அளிக்கிறார்கள். இங்கு நந்தி பகவான் முன்பு அகல் விளக்கை ஏற்றாமல் வெறும் அகலை மட்டுமே வைத்து வழிபடுகிறார்கள். இப்படிச் செய்தால் நினைத்த காரியம் ஈடேறும் என்கின்றனர்.

ஜெயசெல்வி

The post கிழமைகள் தரும் கீர்த்தி appeared first on Dinakaran.

Related Stories: