இந்தியாவின் தலை எழுத்தை மாற்ற இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்வீர்: மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் பேச்சு

சென்னை, ஏப். 18: இந்தியாவின் தலை எழுத்தை மாற்ற இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்வீர் என மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் கேட்டுக்கொண்டார். சென்னை பெசன்ட் நகரில் நடந்த இந்தியா கூட்டணியின் மக்களவை தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன், தென்சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை அறிமுகப்படுத்தி இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

முன்னதாக, மத்திய சென்னை தொகுதியின் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் பேசியதாவது: எப்போதும் தமிழ்நாடு இந்தியாவிற்கு எடுத்துக்காட்டாக இருக்கும். 1970ல் கலைஞர் இருக்கும்போதுதான் குடிசை மாற்றுவாரியம் கொண்டு வந்து குடிசையில் இருக்கும் மக்கள் அடுக்குமாடியில் குடியேறினார்கள். இதை பார்த்த இந்திரா காந்தி, இது சிறப்பான திட்டம் என்று இந்தியா முழுவதும் கொண்டு வரவேண்டும் என பிரதம மந்திரி வீட்டுவசதி திட்டம் என்று இந்தியா முழுவதும் கொண்டுவரப்பட்டது. இன்று முதல்வரால் கலைஞர் உரிமை தொகை திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பரவியுள்ளது. அதற்கும் முன்னோடியாக திகழ்வது திராவிட முன்னேற்ற கழகம் தான். இந்தியாவில் மட்டுமல்ல உலகம் அளவிற்கு தமிழ்நாட்டில் உள்ள திட்டங்கள் எடுத்துக்காட்டாக உள்ளதுதான் நமது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.

காலை சிற்றுண்டி திட்டம் கனடா நாட்டிலும் பரவி உலகளவில் தமிழ்நாடு, மு.க.ஸ்டாலின் தான் முன்னுதாரணமாக உள்ளார். எவ்வாறு தமிழ்நாடு முதல்கட்ட தேர்தலை சந்தித்து 40க்கும் 40 என வெற்றி பெறுகிறதோ, அதேபோல் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று, அடுத்த பிரதமர் நீங்கள் கைகாட்டுகின்றவர்தான் என்று தெரிவித்துக்கொள்கிறேன். மத்திய சென்னையின் 2ம் எண், பெயர் தயாநிதி மாறன், வெற்றி சின்னமாம் உதயசூரியன் நீல நிற பொத்தானை அழுத்துங்கள். கண்டிப்பாக இந்தியாவின் தலை எழுத்தை மாற்றுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மாவட்ட செயலாளர்கள் மயிலை வேலு, சிற்றரசு, தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ராமகிருஷ்ணன், ஆம் ஆத்மி மாநில செயலாளர் வசீகரன், மாநிலங்களவை உறுப்பினர்கள் வில்சன், என்.ஆர்.இளங்கோவன், கனிமொழி சோமு, சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் மோகன், அரவிந்த் ரமேஷ், பிரபாகர ராஜா, கருணாநிதி, வெற்றியழகன், எழிலன், அசன் மவுலானா உள்ளிட்ட இந்நாள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் இந்தியா கூட்டணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

The post இந்தியாவின் தலை எழுத்தை மாற்ற இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்வீர்: மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: