நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு 19ம் தேதி காலை 7 மணிக்கு தொடக்கம்: இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் செய்ய தடை; விதி மீறினால் 2 ஆண்டு சிறை; தேர்தல் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கப்படும், இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் செய்ய தடை உள்ளிட்ட பல்வேறு தேர்தல் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு மக்களவை பொதுத்தேர்தல்கள் மற்றும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்.

அதன்படி, நாளை மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடியும் வரை 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, வழிகாட்டு நெறிமுறைகள் அமலில் இருக்கும் அவை பின்வருமாறு:
* தேர்தல் தொடர்பான எந்தவித பொதுக்கூட்டத்தையோ, பேரணியையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது.
* எந்த ஒரு தேர்தல் விவகாரத்தையும், திரைப்படம், தொலைக்காட்சி, எஃப்.எம். ரேடியோ, வாட்ஸ்அப், முகநூல், டிவிட்டர் போன்ற அல்லது இது போன்ற சாதனம் வாயிலாக பொதுமக்களின் பார்வைக்கு வைக்கக் கூடாது. அதேபோல், குறுஞ்செய்தி மற்றும் இணையம் உட்பட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடர்பையும் இது உள்ளடக்கும்.
* பொதுமக்களில் எந்தவொரு நபரையும் ஈர்க்கிற வகையில், எந்தவித இசை நிகழ்ச்சி அல்லது திரையரங்கச் செயல்பாடு அல்லது ஏதேனும் பிற கேளிக்கை அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சியை நடத்த அல்லது ஏற்பாடு செய்வதன் மூலம் பொதுமக்களிடம் தேர்தல் விவகாரத்தை யாராக இருந்தாலும் பரப்புரை செய்யக் கூடாது. இந்த விதிமுறையை மீறினால் 2 ஆண்டுகள் சிறை (அ) அபராதம் (அ) இவையிரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
* தொகுதிக்கு வெளியேயிருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் இன்று மாலை 6 மணிக்கு மேல் அந்த தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.
* கல்யாணமண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் யாரேனும் தங்கியுள்ளனரா என்பது கண்டறியப்படும்.
* வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உட்பட வாகன அனுமதிகள் இன்று மாலை 6 மணியுடன் செயல்திறனற்றதாகிவிடும்.

மக்களவைத் தேர்தலுக்கான ஒவ்வொரு வேட்பாளருக்கும் வாக்குப்பதிவு நாளன்று வாகன அனுமதி பின்வருமாறு:
1. மக்களவைத் தொகுதி முழுவதும் அவரது சொந்த பயன்பாட்டிற்கான ஒரு வாகனம்.
2. தேர்தல் முகவரின் பயன்பாட்டிற்கான மக்களவை தொகுதிக்கு ஒரு வாகனம்.
3. மக்களவைத் தொகுதியில் அடங்கியுள்ள ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்காக தேர்தல் முகவர் அல்லது அவரது பணியாளர்கள் அல்லது கட்சி பணியாளர்களின் பயன்பாட்டிற்கான ஒரு வாகனம்.
4. மேலே குறிப்பிடப்பட்டுள்ள வாகனங்களின் அனுமதி தேர்தல் நடத்தும் அதிகாரியால் வழங்கப்படும்.

* வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கும், வாக்குச் சாவடிகளிலிருந்து அழைத்துச் செல்வதற்கும் வேட்பாளர் அல்லது அவரது முகவர் வாகனத்தை வாடகைக்கு எடுப்பதற்கு அல்லது வாங்குவதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு எந்தவொரு வேட்பாளரும் அனுமதிக்கக்கூடாது. இது தேர்தல் விதிமுறைகளில் முறைகேடான செயலில் அடங்கும்.
* இரண்டு நபர்களை மட்டுமே கொண்ட வேட்பாளர்களின், அரசியல் கட்சிகளின் தற்காலிக பிரசார அலுவலகம் வாக்குச் சாவடியிலிருந்து 200 மீட்டர் தொலைவிற்கு வெளியே அமைக்கப்படலாம். தேவையில்லாத கூட்டத்தை அவர்கள் கூட்ட அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

The post நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு 19ம் தேதி காலை 7 மணிக்கு தொடக்கம்: இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் செய்ய தடை; விதி மீறினால் 2 ஆண்டு சிறை; தேர்தல் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: