ஆனால், அந்த நல்ல மனிதரின் மூலமாகத் தோன்றிய அவருடைய வழித்தோன்றல்கள் இறைவன் அருளிய நல் வழியைக் காலப் போக்கில் மறந்தார்கள். தவறான வழிகளைக் கடைப் பிடித்தார்கள். அதனால் இறைவனின் கோபத்திற்கு ஆளானார்கள்.ஆயினும், இறையருள் இறைவனின் கோபத்தை மிகைக்கும் ஆற்றல் பெற்றது. இறைவன் தன் அடியார்களைக் கடைசி வரை வேதனையிலிருந்து காப்பாற்றவே விரும்புகிறான்.எனவே, மனிதர்கள் எப்போது வரம்பு மீறி இறைத்திருப்திக்கு மாற்றமாகச் செயல்பட்டாலும் அவர்களை நல்வழிப்படுத்த தூதர்களை அனுப்புவான். அதன் மூலமாக இறைவேதனை குறித்து அவர்களுக்கு விழிப்பு உணர்வூட்டி எச்சரிப்பான். மக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன என்பதைத் தூதர்கள் தெளிவாக எடுத்துரைப்பார்கள். வழிகேட்டில் இருக்கும் மக்களுக்கு அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதைத் தூதர்கள் எச்சரித்துக்கொண்டே இருந்தார்கள்.“மனிதர்களே, இறைவனுக்கு அடிபணியுங்கள். அவனுக்கு மாறு செய்யாதீர்கள். மாறு செய்தால் இறைவேதனை வருவது நிச்சயம். இறைவேதனை வந்துவிட்டால் தப்பிக்கவே முடியாது” என்று அறிவுறுத்திக் கொண்டும் இருந்தார்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால்; இறைவனை ஏற்றுக் கொண்டு, அவனுடைய வழிகாட்டுதலுக்கு ஏற்ப வாழ்வை அமைத்துக் கொண்டால் இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெறலாம் என்று நற்செய்தி சொல்பவர்களாகவும், இறைவனுக்கு மாறு செய்தால் ஈருலகிலும் கடும் வேதனைக்கு ஆளாவீர்கள் என்று எச்சரிப்பவர்களாகவும்தான் இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்.
– சிராஜுல்ஹஸன்
The post எதற்காக இறைத்தூதர்கள்? appeared first on Dinakaran.