தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் ரயில்வே துறை சார்ந்த தேவைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்துள்ளேன்: தமிழச்சி தங்கபாண்டியன் பேட்டி

சென்னை: தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, நேற்று தி.நகர் 142வது வட்டத்திற்கு உட்பட்ட சி.ஐ.டி நகரில், போக் சாலை, சாதூல்லா ரோடு, வ.உ.சி தெரு, மேட்லி தெரு, காமராஜர் காலனி, பர்கிட் ரோடு, மன்னார் தெரு, தாமோதரன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் புறாக்களை பறக்கவிட்டு, மாவட்ட செயலாளர் மயிலை வேலு எம்.எல்.ஏ, தலைமையில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நான் 2019ல் வெற்றி பெற்றது முதல் 2024வரை, தென் சென்னை தொகுதியில், ரயில்வே துறை சார்ந்த பிரச்னைகளுக்காக அவ்வபோது ஆய்வு மேற்கொண்டு தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் மனு அளித்துள்ளேன். ZRUCC கூட்டம் அனைத்திலும் கலந்துகொண்டு, தொகுதிக்குட்பட்ட அனைத்து‌ ரயில்வே துறை சார்ந்த பிரச்சனைகளுக்காகவும் பேசியுள்ளேன். அதன் விளைவாக மாம்பலம், சைதாப்பேட்டை ரயில் நிலையங்களில் பழுதடைந்த மேற்கூரை மாற்றப்பட்டது.

தரமணி ரயில் நிலைய சாலையில் ரூ.1.68 கோடியில் 100க்கும் மேற்பட்ட மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. முண்டக்கன்னியம்மன் கோயில் ரயில் நிலையத்தில் நுழைவாயில் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் திட்ட பணி தொடர்பாக, நாடாளுமன்றத்தில் பலமுறை பேசியும், ரயில்வே அமைச்சரைச் சந்தித்து கோரிக்கை விடுத்ததன் காரணமாக, நிலம் கையகப்படுத்துதல் முடிக்கப்பட்டு, பணி மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் குறித்தும் பலமுறை நாடாளுமன்றத்தில் குரல்‌ கொடுத்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, பகுதிச் செயலாளர் ஏழுமலை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்‌ ராஜா அன்பழகன், திமுக நிர்வாகிகள், தோழமைக் கட்சியினர் உடன் இருந்தனர். பின்னர், விடுதலை சிறுத்தைகள் கட்சி – சைதை மத்திய மாவட்டம் சார்பாக, வேட்பாளர் அறிமுகம் – செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் சைதை ஜேக்கப் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், பகுதி செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, துரைராஜ், துணை மேயர் மகேஷ் குமார், நிர்வாகிகள், விசிக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் பேசுகையில், ‘‘இது, நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் மட்டும் அல்ல; மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் எனும் அளவிற்கு, பாசிச பாஜவை வேரோடு அழிக்கும் களம். அண்ணல் அம்பேத்கர் நமக்கு கொடுத்த அரசியல் சாசனத்தை ஏற்கனவே பாதியை ஒன்றிய பாஜ அரசு மாற்றிவிட்டது. மேலும் சிஏஏ, என்ஆர்சி, குடியுரிமை சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் என மக்கள் விரோத செயல்களை மட்டுமே செய்யும் பாஜவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும். அதற்கு நம்முடைய மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்தியா கூட்டணி மாபெரும், எழுச்சி மிகுந்த வெற்றி பெறுவதற்கு, எல்லோரும் பாடுபட வேண்டும்,’’ என்றார்.

The post தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் ரயில்வே துறை சார்ந்த தேவைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்துள்ளேன்: தமிழச்சி தங்கபாண்டியன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: