பறக்கும் படை சோதனையில் ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.29.86 லட்சம் அதிரடி பறிமுதல்


சென்னை: கோயம்பேடு பகுதியில் பறக்கும் படை அதிகாரி செல்வம் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே பைக்கில் வந்த வாலிபரை நிறுத்தியபோது, தப்பிக்க முயன்றார். அவரை மடக்கி பிடித்து, அவரிடம் இருந்து பையை சோதனை செய்தபோது, ரூ.7 லட்சம் இருந்தது. விசாரணையில் அவர், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராஜா என்பதும், சென்னை நெசப்பாக்கம் பகுதியில் ஒரு தனியார் கட்டிட நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்வதும் தெரிந்தது. ஆனால், இந்த பணத்திற்கு உரிய ஆவணம் அவரிடம் இல்லாததால், அதை பறிமுதல் செய்து, கிண்டியில் உள்ள அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

* புளியந்தோப்பு டிம்லர்ஸ் சாலையில் நேற்று முன்தினம் இரவு பறக்கும் படை அதிகாரி பாஸ்கர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை மடக்கி சோதனை செய்தபோது, அதில் ரூ.99 ஆயிரம் இருந்தது. விசாரணையில், பெரவள்ளூர் ராம் நகர் 1வது மெயின் ரோட்டை சேர்ந்த சித்ரா (52), உரிய ஆவணமின்றி அந்த பணத்தை கொண்டு சென்றது தெரிந்தது. அதை பறிமுதல் செய்து, அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

* புது வண்ணாரப்பேட்டை இளைய முதலி தெருவில், பறக்கும் படை அதிகாரி முத்தமிழ்ச் செல்வன் தலைமையில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே பைக்கில் வந்தவரை மடக்கி, சோதனை செய்தபோது, அவரிடம் ரூ.15 லட்சம் இருப்பது தெரியவந்தது. விசாரணையில், மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு வஉசி நகரை சேர்ந்த குபேந்திரன் (45), உரிய ஆவணமின்றி அந்த பணத்தை கொண்டு சென்றது தெரிய வந்தது. எனவே, அந்த பணத்தை பறிமுதல் செய்து, ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி வாசுகியிடம் ஒப்படைத்தனர்.

* சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், புழல் மத்திய சிறை அருகே மாதவரம் தாசில்தார் வெங்கடாஜலபதி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சென்னையில் இருந்து செங்குன்றம் நோக்கி வந்த ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், ரூ.4.5 லட்சம் இருந்தது. விசாரணையில், ஆந்திராவை சேர்ந்த ராஜீ ஜெகநாதன், தசாரி வெங்கடேஸ்வரா ராவ், ராம கோட்டால ஜெகநாதன் ஆகியோர் உரிய ஆவணமின்றி அந்த பணத்தை கொண்டு செல்வது தெரிந்தது. அதை பறிமுதல் செய்து, அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

* மாதவரம் நெடுஞ்சாலையில் பறக்கும் படை அதிகாரி வெங்கடாச்சல திருப்பதி மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக வந்த பைக் ஒன்றை மடக்கி சோதனை செய்தபோது அதில் ரூ.75 ஆயிரம் இருந்தது. விசாரணையில், கொடுங்கையூர், காந்திநகரை சேர்ந்த பாலாஜி பாபு (50) என்பவர், உரிய ஆவணமின்றி பணத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது. அதை பெரம்பூர் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

* ஓட்டேரி மேட்டுப்பாளையம், ஸ்டீபன்சன் சாலையில் நேற்று உதவி செயற்பொறியாளர் மகேஷ் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பைக்கில் வந்த புளியந்தோப்பு, வஉசி நகரை சேர்ந்த இனையதுல்லா (36) என்பவர், உரிய ஆவணமின்றி ரூ.76 ஆயிரம் எடுத்து சென்றது தெரிந்தது அதை பறிமுதல் செய்து, அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

* பறக்கும் படை அதிகாரி நவீன்குமார் தலைமையில் தண்டையார்பேட்டை இளைய முதலி தெருவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு பைகை மடக்கி சோதனை செய்தபோது அவரிடம் ரூ.86 ஆயிரத்து 500 இருப்பது தெரியவந்தது. அதற்கு எந்த ஒரு ஆவணமும் அவரிடம் இல்லாததால் அதை பறிமுதல் செய்து ஆர்கே நகர் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

The post பறக்கும் படை சோதனையில் ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.29.86 லட்சம் அதிரடி பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: