மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்குவது குறித்து நாளை காலை 9 மணிக்குள் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க ஐகோர்ட் ஆணை!!

சென்னை: மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்குவது குறித்து நாளை காலை 9 மணிக்குள் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க கோரி கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வைகோ தரப்பில் தங்கள் கோரிக்கையை ஏற்று கட்சி நிர்வாகிகளின் பெயர்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்த தேர்தல் ஆணையம், பம்பரம் சின்னம் ஒதுக்கீடு செய்யவில்லை. வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி நாள் என்பதால், தங்கள் கோரிக்கையை பரிசீலிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரினார்.

இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர், சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிடும் பட்சத்தில் ஒரே சின்னம் ஒதுக்கப்படும். மதிமுகவின் கோரிக்கை மீது இன்று முடிவெடுக்கப்படும். 14 ஆண்டுகளுக்கு முன்பு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட நிலையில் மதிமுகவுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர்தல் அதிகாரி தான் முடிவு எடுப்பார் என்று தெரிவித்தார். இதையடுத்து, பம்பரம் சின்னம் புது சின்ன பட்டியலில் உள்ளதா இல்லையா என்பது குறித்து பிற்பகல் விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை தள்ளிவைத்தனர்.

இதைத் தொடர்ந்து வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, பம்பர சின்னத்தை பொது சின்னமாகவோ ஒதுக்கீட்டு சின்னமாகவோ வகைப்படுத்தப்படவில்லை என்றும் மதிமுகவின் விண்ணப்பம் மீது நாளை காலைக்குள் முடிவெடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நாளை பிற்பகல் வழக்கு விசாரணைக்கு வரும் போது தேர்தல் ஆணையத்தின் முடிவை தெரிவிக்க ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

The post மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்குவது குறித்து நாளை காலை 9 மணிக்குள் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க ஐகோர்ட் ஆணை!! appeared first on Dinakaran.

Related Stories: