குடிநீர், கழிவுநீர் வரி செலுத்த 31ம் தேதி கடைசி நாள் வரும் ஞாயிற்றுக்கிழமை அனைத்து வரி வசூல் மையங்களும் இயங்கும்: வாரியம் அறிவிப்பு

சென்னை: குடிநீர், கழிவுநீர் வரி செலுத்த வரும் 31ம் தேதி கடைசி நாள் என்பதால், அன்றைய தினமான ஞாயிற்றுக்கிழமை அனைத்து வரி வசூல் மையங்களும் இயங்கும் என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்திற்கு செலுத்த வேண்டிய குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரி மற்றும் குடிநீர் கட்டணங்களை மார்ச் மாதம் 31ம் தேதிக்குள் நுகர்வோர்கள் செலுத்திட வேண்டும். அனைத்து பகுதி அலுவலகங்கள், பணிமனை அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகத்தில் இயங்கும் வரி வசூல் மையங்கள் அனைத்து வேலை நாட்களிலும், சனிக்கிழமைகளிலும் இயங்கி வருகிறது.

இந்நிலையில், நுகர்வோர் வரி செலுத்துவதற்கு ஏதுவாக வரும் 31ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அனைத்து வரி வசூல் மையங்களும் இயங்கும். சென்னை குடிநீர் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய குடிநீர் வரி மற்றும் கட்டணங்களை காசோலை மற்றும் வரைவோலைகளாக செலுத்தும் நுகர்வோர்களின் வசதிக்காக அனைத்து பகுதி அலுவலகங்கள் மற்றும் பணிமனை அலுவலகங்களில் காசோலை, வரைவோலை பெறுவதற்கான பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் நுகர்வோர்கள் தங்களது நிலுவை தொகையினை https://bnc.chennaimetrowater.in என்ற வலைதளத்தை பயன்படுத்தி கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலமாக பணம் செலுத்தலாம். இ-சேவை மையங்கள் மற்றும் யுபிஐ, கியூஆர் குறியீடு போன்ற கட்டண முறைகளையும் பயன்படுத்தி நுகர்வோர்கள் தங்களின் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரி, குடிநீர் கட்டணங்களை செலுத்தலாம். எனவே, நுகர்வோர்கள் வரும் 31ம் தேதிக்குள் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய வரிகள் மற்றும் கட்டணங்களை உடனடியாக செலுத்தி சென்னை குடிநீர் வாரியத்தின் வளர்ச்சி பணிகளுக்கு ஒத்துழைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post குடிநீர், கழிவுநீர் வரி செலுத்த 31ம் தேதி கடைசி நாள் வரும் ஞாயிற்றுக்கிழமை அனைத்து வரி வசூல் மையங்களும் இயங்கும்: வாரியம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: