அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து சென்னையில் திமுகவினர் மாபெரும் ஆர்ப்பாட்டம்: தயாநிதிமாறன் எம்பி ஆவேச பேச்சு

சென்னை: அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து சென்னையில் திமுகவினர் நேற்று மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தயாநிதி மாறன் எம்பி, மேயர் பிரியா, தாயகம் கவி எம்எல்ஏ உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதையொட்டி, சென்னை தெற்கு ரயில்வே பொது மேலாளர் அலுவலகம் எதிரில், ஒன்றிய பாஜ அரசை கண்டித்து திமுகவின் சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் தாயகம் கவி எம்எல்ஏ, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் தயாநிதி மாறன் எம்பி பேசியதாவது: பிரதமர் மோடி அரசு, தோல்வி பயத்தில் ஈடி மற்றும் சிபிஐயை தவறாக பயன்படுத்துகிறது. எதிர்க்கட்சியை மிரட்டுகின்ற வகையில், ஈடி மூலமாக, சிபிஐ மூலமாக வழக்கை தொடர்வது, இப்போது அதற்கு ஒரு படி மேலே சென்று, தலைவர்களை எல்லாம் கைது செய்கிறார்கள்.

இதற்கெல்லாம் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நமது இந்தியா கூட்டணி சரியாக பாடத்தை புகட்டும். அணைகின்ற விளக்கு மிக பிரகாசமாக எரியும் என்று சொல்வார்கள். அதைப்போல், 10 ஆண்டுகள் ஆட்சியை அனுபவித்த மோடி, இப்போது மூன்றாவது முறையாக வர மாட்டார் என்று தெரிந்தவுடன் தன்னால் முடிந்த அளவுக்கு ஈடி மற்றும் சிபிஐயை வைத்து மிரட்டுகிறார். இதற்கான பதிலடி வருகின்ற தேர்தல் தான். இந்தியா கூட்டணி உருவாவதற்கு முக்கியமான காரணமாக இருந்தவர் தலைவர் மு.க.ஸ்டாலின் தான்.

ஜனநாயக முறையில் ஒரு ஆட்சி மாற்றத்தை இந்தியாவில் உருவாக்கிடவேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். டெல்லி முதல்வர், பொய்யான வழக்குகளில் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதற்கு முன்னால், மணிஷ் சிசோடியா-வை கைது செய்தார்கள். ஓர் ஆண்டாகியும் இதுவரைக்கும் வழக்கே வரவில்லை. 8000 கோடி ரூபாய் தேர்தல் பத்திரத்தில் ஊழல் செய்துள்ளார்கள். அதையெல்லாம் மூடி மறைத்துவிட்டு, அவர்கள் நல்லவர்கள் போல இன்று வேஷமிடுகிறார்கள்.

முகத்திரையை கிழிப்பதுதான் திமுகவின் முதல் வேலை. எப்படி மதுரையில் எய்ம்ஸ் கல்லூரி கட்டப்படும் என்று சொல்லி ஏமாற்றி வருகிறார்கள். அதேபோல, சிஏஜி சொல்கிறார்கள். பிரதமர் மோடியின் அரசு ஏழரை லட்சம் கோடி ரூபாய்-க்கு ஊழல் செய்திருக்கிறது. பிரதமர் மோடி அரசில், ஒரு கிலோ மீட்டர் ரோடு போடுவதற்கு 280 கோடி ரூபாய் செலவாகிறதாம்.

அப்படியென்றால் 280 கோடி ரூபாய் என்றால், எவ்வளவு லட்சம் கோடிகளை நீங்கள் ஊழல் செய்திருக்கிறீர்கள். இவையெல்லாம் நாங்கள் மக்களிடத்தில் சொல்லி, மிகுந்த ஊழல்வாதி மோடியின் இந்த அராஜகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளியை வைக்கவேண்டும். இந்தியா கூட்டணி வெல்லவேண்டும், தமிழகம், புதுச்சேயில் 40 தொகுதியையும் வெல்வோம், இந்தியா முழுவதும் நாம் வெல்வோம், இந்தியாவை காப்பாற்ற இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும். இவ்வாறு அவர் பேசினார்.

The post அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து சென்னையில் திமுகவினர் மாபெரும் ஆர்ப்பாட்டம்: தயாநிதிமாறன் எம்பி ஆவேச பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: