மண்டலக்குழு தலைவர், கவுன்சிலர் அலுவலகங்களுக்கு அதிகாரிகள் சீல்: சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணியும் தீவிரம்

திருவொற்றியூர்: நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து திருவொற்றியூர், மணலி, மாதவரம் போன்ற அனைத்து மண்டலங்களில் உள்ள மண்டலக்குழு தலைவர் அலுவலகம், கவுன்சிலர் அலுவலகம் ஆகியவை பூட்டி சீல் வைக்கப்பட்டது. ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் 5ம் தேதி முதல் மீண்டும் இந்த அலுவலகங்கள் செயல்பாட்டுக்கு வரும்.

இதனிடையே மதில்சுவர்கள், குடிநீர் தொட்டிகள் ஆகியவற்றில் ஒட்டப்பட்டிருந்த அரசியல் கட்சி போஸ்டர்கள், விளம்பரங்களை மறைக்கும் பணியில், மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பேருந்து நிறுத்த நிழற்குடைகளில் இடம் பெற்றுள்ள அரசு சாதனை விளம்பரங்களையும் காகிதம் மற்றும் வெள்ளை பேனர்களை வைத்து மறைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதேபோல், சுவர்களில் எழுதப்பட்டுள்ள அரசியல் கட்சி விளம்பரங்களை சுண்ணாம்பு மற்றும் பெயின்ட் அடித்து மறைக்கப்படுகிறது. இதனிடையே நேற்று முன்தினம் இரவு அதிகாரிகள் வாகனங்களில் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத பணம் மற்றும் சந்தேகப்படும்படியான பொருட்கள் இருக்கிறதா என்பது குறித்தும் அவர்கள் சோதனை செய்தனர்.

The post மண்டலக்குழு தலைவர், கவுன்சிலர் அலுவலகங்களுக்கு அதிகாரிகள் சீல்: சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணியும் தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: