திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு!!

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை இன்று கட்சி தலைமை அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை, திருப்பூர் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த இரு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான நிர்வாக குழு கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள பாலன் இல்லத்தில் நேற்று நடைபெற்றது.இதில் மாநில செயலாளர் முத்தரசன், தேசிய செயலாளர் நாராயணா, நல்லக்கண்ணு உட்பட நிர்வாக குழுவின் 31 உறுப்பினர்கள் பங்கேற்றனர். குறிப்பாக,கடந்த தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூர் தொகுதியில் சுப்புராயன் போட்டியிட்டு 5,08,725 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். இதனால் இம்முறையும் இவருக்கே சீட் வழங்க கட்சி தலைமை முடிவு செய்துள்ளது.

அதே போல்,நாகையில் கடந்த தேர்தலில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராஜ் , மீண்டும் களமிறக்கப்படுகிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்ட செயலாளராக வை.செல்வராஜ் உள்ளார். இந்திய கம்யூ. கட்சியின் மன்னார்குடி ஒன்றிய செயலாளராக
12 ஆண்டுகளாக செயல்பட்டவர் வை.செல்வராஜ். இந்த நிலையில் வேட்பாளர்கள் தொடர்பான அறிவிப்பை இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மேலும் பேசிய அவர், “நடப்பு தேர்தலில் ஒரு பக்கம் மதவெறி சக்திகள் அணிதிரண்டு உள்ளனர். தேர்தல் ஜனநாயகம், அரசியல் அமைப்பு சட்டங்கள் காப்பற்ற வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனியின் சொந்தமான கொரியர் கம்பெனியில் திடீர் சோதனை நடத்துவதற்கான அவசியம் என்ன?. 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். வேறு மாநிலங்களில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட்டால் தப்பிப்பார். தமிழ்நாட்டில் தமிழிசை போட்டியிட்டால் தோல்விதான் அடைவார்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: