அரியானா முதலமைச்சர் கட்டர் ராஜினாமா: புதிய கூட்டணியுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது பாஜக

சண்டிகர்: அரியானாவில் பாஜகவுக்கு அளித்து வந்த ஆதரவை ஜே.ஜே.பி. வாபஸ் பெற்றதால் முதலமைச்சர் கட்டார் ராஜினாமா செய்தார். 90 இடங்களைக் கொண்ட அரியானா சட்டப்பேரவையில் பாஜக சார்பில் 40 உறுப்பினர்கள் உள்ளனர். ஜனநாயக ஜனதா கட்சியின் 10 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் பாஜக 2019ல் ஆட்சி அமைத்தது. மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீட்டில் பாஜக-ஜனநாயக ஜனதா கட்சி இடையே முரண்பாடு ஏற்பட்டது. தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் பாஜக கூட்டணியில் இருந்து JJP விலக முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

அரியானாவில் உள்ள 7 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் பாஜக மீண்டும் ஆட்சியமைக்க முடிவு செய்தது. இந்நிலையில் முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் ராஜினாமா செய்தார். முதலமைச்சர் மட்டுமின்றி பாஜகவை சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் கூண்டோடு பதவி விலகினர். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் பாஜக கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததால் பரபரப்பு நிலவி வருகிறது. பாஜக – ஜே.ஜே.பி. கூட்டணி ஆட்சி கவிழ்ந்தாலும் புதிய கூட்டணியுடன் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கிறது. பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் பட்சத்தில் நயாப் சைனி முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

மனோகர் லால் கட்டாரை மக்களவைத் தேர்தலில் களம் இறக்க பாஜக தலைமை ஆலோசித்து வருகிறது. அரியானாவில் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடக்கிறது. நயாப் சைனி அரியானாவின் புதிய முதல்வராக நியமிக்கப்படுவார் என பாஜக வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது. ஒன்றிய அமைச்சர் அர்ஜுன் முண்டா, பாஜக தேசிய செயலாளர் தருண் சுக் ஆகியோர் சண்டிகரில் முகாமிட்டுள்ளனர்.

The post அரியானா முதலமைச்சர் கட்டர் ராஜினாமா: புதிய கூட்டணியுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது பாஜக appeared first on Dinakaran.

Related Stories: