சென்னை மாநகராட்சியில் உள்ள பூங்காக்களின் பராமரிப்புப் பணிகளுக்கான ஆணைகள், உபகரணங்களை வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சென்னை பெருநகர மாநகராட்சியில் உள்ள பூங்காக்களின் பராமரிப்புப் பணிகளுக்கான ஆணைகள் மற்றும் உபகரணங்களை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

மகளிர் சுய உதவிக் குழுக்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரின் தலைமையின் கீழ் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கமான நகர்ப்புரங்களில் உள்ள ஏழைகளைக் கொண்டு சுய உதவிக்குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகளை அமைத்து, அவற்றின் உறுப்பினர்களுக்கு தொழிற் பயிற்சிகள், வங்கிக் கடன் இணைப்புகள் போன்றவற்றை பெற்றுத் தந்து அவர்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கு வாய்ப்பு ஏற்படுத்தி வருகிறது.

நமது அரசு செயல்படுத்தும் ஒவ்வொரு திட்டத்திலும் மகளிர் பயன் பெற வேண்டும், குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் அரசு செயல்படுத்தும் எத்தகைய திட்டமானாலும் அத்திட்டத்தில் சுய உதவிக் குழுவினரின் பங்களிப்பு இருக்க வேண்டும், அதன் மூலம் மகளிர் பயன் பெற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில், பூங்காக்களைப் பராமரிக்கும் பணிகளை சுய உதவிக் குழுவினர் மூலம் செயல்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாட்டில் முதல் முறையாக நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் உருவாக்கப்பட்ட 51 பூங்காக்களை தேர்வு செய்து, அவற்றினை பராமரிப்பதற்காக நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் தகுதி வாய்ந்த, ஆர்வம் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, பூங்காக்கள் பராமரிப்பு முறைகள், நீர்நிலை மேலாண்மை, விளையாட்டு சாதனங்களைப் பராமரித்தல், நர்சரி மேம்பாடு போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டு, பராமரிப்பிற்கான உபகரணங்கள், சான்றிதழ், கையேடுகள் போன்றவை வழங்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையின் வாயிலாக சுமார் 500 சுய உதவிக் குழுவினரின் குடும்பங்கள் நேரடியாக பயனடைவர்.

இத்திட்டத்தினை துவக்கி வைக்கும் வகையில் முதற்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 6 பூங்காக்களை பராமரிக்கும் பணிக்கான ஆணை மற்றும் உபகரணங்களை நகர்ப்புர சுய உதவிக் குழுக்களிடம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (04.03.2024) வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, துணை மேயர் மு. மகேஷ்குமார், கூடுதல் தலைமைச் செயலாளர் / பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் ப. செந்தில்குமார், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் . ச. திவ்யதர்சினி, செயல் இயக்குநர் . ஸ்ரேயா பி சிங், துணை ஆணையர் (கல்வி) . சரண்யா அரி, பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழு தலைவர் (கல்வி) பாலவாக்கம் த. விஸ்வநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post சென்னை மாநகராட்சியில் உள்ள பூங்காக்களின் பராமரிப்புப் பணிகளுக்கான ஆணைகள், உபகரணங்களை வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: