நினைவு மண்டபம் கல்வெட்டு உள்ளிட்ட அனைத்து பதிவுகளிலும் திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் என்று பதிவு செய்ய உரிய நடவடிக்கை: முதல்வருக்கு எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ கடிதம்

சென்னை: திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் உரிய அறிவுறுத்தாழ் ஆணையின்படி தேவைப்பட்ட கூடுதல் நிதியினை ஒதுக்கி செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கத்தில் திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசனின் நினைவு மண்டபத்தை சிறப்பாக கட்டியமைத்ததற்கு மக்கள் பெரிதும் பாராட்டுகின்றனர். ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த சமூகத்திற்குமான மிகப்பெரிய ஆளுமையான திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசனின் சமூக தொண்டு மிகப்பெரியது.

சட்டமன்ற உறுப்பினராக 1923 நவம்பர் முதல் 1939 வரை இவர் ஆற்றிய பணி குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்கள் தெருக்களில் சுதந்திரமாக நடமாடவும், பொது பயன்பாட்டில் உள்ள கிணறு போன்றவற்றை உரிமையோடு பயன்படுத்திடவும் முன்மொழிந்த தீர்மானமும், மதுக்கடைகளை மூட வேண்டும் என முன்மொழிந்த தீர்மானமும் வரலாற்று முக்கியத்துவம் பெற்றது. ஆனால் இம்மண்டபத்தில் அவரது பெயர் குறிப்பிடப்படும் இடங்களில் எல்லாம் வெகு சாதாரணமாக இரட்டைமலை சீனிவாசன் என குறிப்பிடப்பட்டு இருப்பது இந்த அரசின் இத்தனை பெரிய சாதனை சிறுமைப்படுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த நினைவு மண்டபத்தில் அவரது பெயர் பொறிக்கப்பட்டு இருக்கும் சுவர், கல்வெட்டு உள்ளிட்ட அனைத்து பதிவுகளிலும் அவரது பெயரை ”திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன்” என்று பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post நினைவு மண்டபம் கல்வெட்டு உள்ளிட்ட அனைத்து பதிவுகளிலும் திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் என்று பதிவு செய்ய உரிய நடவடிக்கை: முதல்வருக்கு எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: