கூட்டணிக்காக அலைபாய மாட்டோம் என்ற செல்லூர் ராஜுவின் குருவி கதையை வைத்தே பதிலடி கொடுத்த அமைச்சர் தங்கம் தென்னரசு: சமூக வலைத்தளங்களில் வைரல்

கூட்டணிக்காக அலைபாய மாட்டோம் என பேரவையில் செல்லூர் ராஜு ேபசியதற்கு, அவர் கூறிய குருவி கதையை வைத்தே பதிலடி கொடுத்த அமைச்சர் தங்கம் தென்னரசுவின் பேச்சு சமூக வலைதளங்களில் வைலராக பரவி வருகிறது. நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர் செல்லூர் ராஜூ பேசுகையில், ‘‘மரக்கிளையில் அமரும் பறவை, அதன் கிளை உடைந்துவிடுமோ என்று அஞ்சுவதில்லை. அதன் நம்பிக்கை, அந்தக் கிளையில் இல்லை, அதன் சிறகில் உள்ளது. அப்படித் தான் எங்கள் கட்சியும். எங்களுக்குக் கூட்டணி உள்ளது என்ற நம்பிக்கையை விட எங்கள் தொண்டர்களின் மீது இருக்கும் நம்பிக்கை தான் அதிகம். நாங்கள் கூட்டணிக்காக அலைபாய்வதே இல்லை’’ என்றார்.

இதற்கு பதிலடி கொடுத்து அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், ‘‘அண்ணன் செல்லூர் ராஜூ அவரது கட்சியை பற்றி சொன்னார். ஒரு மரக்கிளையில் அந்த அழகான சிட்டுக்குருவி அமர்ந்து கொண்டிருந்தது. அந்த சிட்டுக்குருவியின் இறகுகள் உதிர்கிறதா என்று அதற்கு தெரியவில்லை. ஆனால், அந்தச் சிட்டுக் குருவி ஒவ்வொரு மரக் கிளையாகத் தாவிக் கொண்டிருந்தது. ஏற்கெனவே, ஒரு மரக் கிளையில் உட்கார்ந்த குருவி, இப்போது வேறு மரக் கிளைக்கு தாவிப் போகலாமா அல்லது தன்னோடு வேறு ஏதாவது குருவி வருமா என்று மிகுந்த ஏக்கத்தோடு காத்துக்கொண்டிருக்கிறது. இருந்தாலும், நாங்கள் தாவி அடுத்த மரக் கிளைக்கு போவோம் என்று சொல்கின்ற போதே, பிரதமர் எங்களைப் பாராட்டினார் என்று அந்தக் குருவி தனது உளக்கிடக்கையை அவ்வப்போது சொல்லிக்கொண்டிருக்கிறது. பாராட்டுதல் எங்கிருந்து வர வேண்டுமென்று நீங்கள் காத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது தெரிந்துவிட்டது. அங்கிருந்து உங்களுக்கு அந்தப் பாராட்டுகள் வரட்டும்..’’ என்றார். இதைக்கேட்டு அவையில் அனைவரும் சிரித்தனர். இந்த பேச்சு இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

The post கூட்டணிக்காக அலைபாய மாட்டோம் என்ற செல்லூர் ராஜுவின் குருவி கதையை வைத்தே பதிலடி கொடுத்த அமைச்சர் தங்கம் தென்னரசு: சமூக வலைத்தளங்களில் வைரல் appeared first on Dinakaran.

Related Stories: