கே.வி.குப்பம் அருகே கழிவுநீர் கால்வாய் அமைக்க இடையூறு

*அதிமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கே.வி.குப்பம் : வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த காவனூர் ஊராட்சி சீதாராமபேட்டையில் 15வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.9.40 லட்சம் மதிப்பீட்டில் மாரியம்மன் கோயில் தெரு, ஓம் சக்தி கோயில் தெரு ஆகிய தெருக்களுக்கும், ரூ.4.46 மதிப்பீட்டில் விநாயகர் கோயில் தெருவிற்கும் கழிவுநீர் கால்வாய் கட்ட கடந்த சில மாதங்களுக்கு முன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தொடர்ந்து கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் மாரியம்மன் கோயில் தெரு, ஓம் சக்தி கோயில் ஆகிய தெருக்களில் கால்வாய் பணிகள் முழுவதும் முடிவடையும் நிலையில், விநாயகர் கோயில் தெருவில் தற்போது கால்வாய் கட்ட கடந்த சில நாட்களுக்கு முன் பணி தொடங்கப்பட்டது. கால்வாய் கட்ட ஏதுவாக ஜே.சி.பி மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. இந்த கால்வாய் கே.வி.குப்பம் – கவசம்பட்டு சாலையினை ஒட்டியுள்ள கால்வாயினை இணைக்கும் வகையில் அமைக்கபட உள்ளது. இதனால் தெருவின் எல்லை வரை பள்ளம் தோண்டினர்.

அப்போது கழிவுநீர் கால்வாய் அமைக்க இடையூறாக தெருவின் எல்லையில் அதிமுக ஒன்றிய மகளிரணி இணை செயலாளர் கீதா ஜோதி என்பவரின் வீட்டின் முன்புறம் பைப்புகளை அடைத்து அங்கு தண்ணீர் தொட்டி கட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளார். தெருவை ஆக்கிரமித்ததோடு தற்போது கழிவுநீர் கால்வாய் கட்டும் பணிக்கு இடையூறாக இவர் பைப்புகளை வைத்துள்ளார். இதனால் சுமார் பத்து நாட்களுக்கு மேலாக கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி பாதியில் நிற்கிறது. அதற்காக தோண்டப் பட்ட பள்ளத்தில் இரவு நேரங்களில் முதியவர்கள், குழந்தைகள் விழுந்து காயமடைகின்றனர்.

இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்தவரிடம் பைப்புகளை அகற்றிகொள்ளுமாறு உத்தரவிட்டும் இதுவரை ஆக்கிரமிப்பாளர் அதனை அகற்றப்படாமலயே உள்ளனர். எனவே இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையீட்டு உடனடியாக நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாய் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கே.வி.குப்பம் அருகே கழிவுநீர் கால்வாய் அமைக்க இடையூறு appeared first on Dinakaran.

Related Stories: