பாட்னா: மகாகத்பந்தன் கூட்டணிக்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்ற லாலுபிரசாத் யாதவ் அழைப்புக்கு நிதிஷ் பரபரப்பு பதில் அளித்துள்ளார். பீகார் மாநிலத்தில் காங்கிரஸ், லாலுபிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகளிடம் இருந்து பிரிந்து பா.ஜவுடன் இணைந்து நிதிஷ்குமார் புதிய ஆட்சி அமைத்துள்ளார். பீகார் சட்டப்பேரவை வளாகத்தில் லாலு மகனும், முன்னாள் துணைமுதல்வருமான தேஜஸ்வியுடன் அவர் கைகுலுக்கி பேசி மகிழ்ந்தார். இந்தநிலையில் நிதிஷ்குமாருக்காக கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும் என்று லாலுபிரசாத் யாதவ் தெரிவித்தார். இதுகுறித்து நேற்று முதல்வர் நிதிஷ்குமாரிடம் கேட்ட போது,’ கூட்டாளிகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் தலைவர்களுடன் நான் நல்லுறவைப் பேணி வருகிறேன். அவர்களைச் சந்திக்கும் போதெல்லாம் நான் அவர்களுடன் கைகுலுக்குகிறேன். அவ்வளவுதான். யார் என்ன சொல்கிறார்கள் என்று நான் நினைக்கவில்லை. விஷயங்கள் சரியாக நடக்கவில்லை, அதனால் நான் அவர்களை (லாலுகட்சி) விட்டுவிட்டேன். பீகார் அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான பணிகள் சுமூகமாக நடக்கிறது. இரண்டு அல்லது மூன்று நாட்களில் மேலும் விரிவாக்கப்படும்’ என்றார்.
* தேஜஸ்வி துறை முடிவுகள் மறுஆய்வுக்கு உத்தரவு
மகாகத்பந்தன் கூட்டணியில் இருந்த போது ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை சேர்ந்த துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், அமைச்சர்கள் லலித் யாதவ் மற்றும் ராமானந்த் யாதவ் தலைமையிலான துறைகள் எடுத்த அனைத்து முடிவுகளையும் மறுஆய்வு செய்வதற்கு பீகார் அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 16ம் தேதி முதல்வர் தலைமையிலான அமைச்சரவை செயலகம் வெளியிட்ட கடிதத்தில்,’ சுகாதாரம், சாலை, கட்டுமானம், நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி மற்றும் ஊரக பணித் துறை அதிகாரிகள் முந்தைய கூட்டணி ஆட்சியின்போது எடுக்கப்பட்ட முடிவுகளை மறுஆய்வு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த துறைகளுக்கு தேஜஸ்வி தலைமை தாங்கியது குறிப்பிடத்தக்கது.
The post எப்போது வேண்டுமானாலும் வரலாம்’ லாலுபிரசாத் அழைப்பு நிதிஷ் பரபரப்பு பதில் appeared first on Dinakaran.