திராவிட மாடல் பிரிவினையை தூண்டுவதாக கூறிய ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

சென்னை: திராவிட மாடல் பிரிவினையை தூண்டுகிறது’ என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து சிறுபான்மையினர் நலத்துறை ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகையில்; “பிறப்பில் பேதம் பார்க்கும் சித்தாந்தத்திற்கு சொந்தக்காரர்களான அவர்கள், நம்மைப் பார்த்து பிரிவினைவாதிகள் எனச் சொல்வது வேடிக்கையாக உள்ளது. கோரிக்கை வைத்தால் நடவடிக்கை எடுப்பது என்று இல்லாமல் மக்களுக்கு தேவையானதை பார்த்துப் பார்த்து செய்து வருகிறது திராவிட மாடல் அரசு.

திராவிட மாடல் பிரிவினையை தூண்டுவதாக கூறுவதைவிட நகைச்சுவை வேறு ஏதும் இருக்க முடியாது. இஸ்லாமியர்களுக்கு 3.5% உள் ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றியது திராவிட மாடல் அரசு. பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் இஸ்லாமிய பெண்களுக்கான விடுதிகள் திறக்கப்பட்டுள்ளன. இஸ்லாமிய மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளிவாசல், தர்காக்களுக்கு வழங்கப்படும் மானியத்தொகை ரூ.10 கோடியாக உயர்த்தப்பட்டது.

உலமாக்கள் மற்றும் பணியாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு ரூ.5.46 கோடி செலவில் மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. திமுக அரசு பதவியேற்றதும் முதல்முறையாக மின் மோட்டார் வசதியுடன் கூடிய ஆயிரம் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. உலமா ஓய்வூதியம் பெறுவோர் இறந்தால் அவரது குடும்பத்தினருக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் பயணம் செய்வோருக்கு ஆண்டுதோறும் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. சிறுபான்மையினர் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம் என்று கூறியுள்ளார்.

 

The post திராவிட மாடல் பிரிவினையை தூண்டுவதாக கூறிய ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்! appeared first on Dinakaran.

Related Stories: