விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயில் வருடாபிஷேகம்

விராலிமலை, பிப்.14: விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோயிலில் நடைபெற்ற வருடாபிஷேகம் விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். விராலிமலை கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோயில் சிறப்பு பெற்ற தலமாகும். வருடத்தில் மார்கழி மாதம் விளக்கு பூஜை மற்றும் மண்டகபடி விழா, சித்திரை திருவிழாவில் நடைபெறும் மாவிளக்கு, ஆடு, கோழி பலியிடுதம், படுகளம் உள்ளிட்ட நிகழ்வுகள் இக்கோயிலின் சிறப்பாகும். பல்வேறு சிறப்புகளுடன் வடக்கு நோக்கி அமர்ந்துள்ள இத்தலத்தில் உள்ள மெய்க்கண்ணுடையாள் அம்மன் சுற்றுப்பகுதி 18 கிராமங்களின் காவல் தெய்வமாக போற்றி புகழப்படுகிறார். இந்த நிலையில் இக்கோயில் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று வருடாபிஷேகம் நடத்தப்பட்டது. காலை முதல் கணபதி பூஜை, புண்யாகவாசனம், இரண்டாம் கால பூஜை, வேத திருமுறை பாராயணம், விசேஷ திரவிய ஹோமம் நடந்தது. அதனை தொடர்ந்து மகா பூர்ணாஹுதி, யாத்ரா தானம், எஜமான சங்கல்பம், மகா தீபாராதனை காட்டப்பட்டது. ஏற்பாடுகளை, சுந்தரம் குருக்கள் தலைமையில் அய்யப்பா சேவா சங்கத்தினர், உபயதார்கள், நிர்வாக கமிட்டியினர் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர். வருஷாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர் தொடர்ந்து விழாவில் பக்தர்களுக்கு பொங்கல், சுண்டல் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

The post விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயில் வருடாபிஷேகம் appeared first on Dinakaran.

Related Stories: