இதில் 186வது வார்டு கவுன்சிலர் மணிகண்டன் பேசும்போது, ‘‘இந்த மண்டலத்தில் வரிவிதிப்பு முறையாக செயல்படுவதில்லை. மந்தைவெளி பேருந்து நிலையத்தில் ஆரம்ப சுகாதார மையம், சமுதாயக் கூடம் அமைக்கும் கோரிக்கையை அதிகாரிகள் நிராகரிப்பது நியாயமில்லை’’ என்றார்.
189வது வார்டு கவுன்சிலர் பாபு பேசும்போது, ‘‘பள்ளிக்கரணை ஐ.ஐ.டி. காலனி சமூக நலக்கூடத்தில் ஏழை, எளிய மக்கள் இல்ல நிகழ்ச்சிகளுக்கு பதிவு செய்ய வரைவு காசோலையுடன் சென்றால், அதிகாரிகள் முறையாக பதில் சொல்லாமல் திருப்பி அனுப்பி அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்துகின்றனர்’’ என்றார். அப்போது அங்கிருந்த மண்டல உதவி வருவாய் அலுவலர் தீனதயாளன் கவுன்சிலரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்.
உடனே, மண்டலக்குழு தலைவர் ரவிச்சந்திரன், மாநகராட்சி கல்வி நிலைக்குழு தலைவர் விஸ்வநாதன் ஆகியோர் கவுன்சிலர்கள் கேள்வி கேட்டால் உரிய பதில் சொல்ல வேண்டும். அவை மரபை மீறி அதிகார தோரணையுடன் பேசக்கூடாது என்றனர். ஆனால், உதவி வருவாய் அலுவலரோ மீண்டும் மேஜையை தட்டி சத்தமாக பேசியதால், அவரை மன்றத்தை விட்டு வெளியேறும்படி மண்டலக்குழு தலைவர் உத்தரவிட்டார். அவர் வெளியேறிய பின் கூட்டம் தொடர்ந்தது. பிறகு மண்டலக்குழு தலைவர் ரவிச்சந்திரன் பேசும்போது, ‘மாமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள் அனைத்தும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதிகாரிகளால்தான் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது. அவர்கள் செய்யும் தவறுகளை மக்கள் பிரதிநிதிகள் சுட்டிக் காட்டினால் கோபப்படுவது நியாயமில்லை’’ என்றார்.
The post பெருங்குடி மண்டலக்குழு கூட்டம் கவுன்சிலருடன் வாக்குவாதம் செய்த உதவி வருவாய் அலுவலர் வெளியேற்றம்: உரிய பதில் சொல்லாததால் நடவடிக்கை appeared first on Dinakaran.