மேட்டூர் அணையில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறப்பு

 

மேட்டூர், பிப்.3: டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்களை காத்திட மேட்டூர் அணையிலிருந்து இன்று (3ம்தேதி) முதல் இரண்டு டிஎம்சி தண்ணீர் திறந்துவிட தமிழ்நாடு முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்த காரணத்தாலும், காவிரி நதிநீர் பற்றாக்குறையாலும், டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டு வருவதால், மேட்டூர் அணையிலிருந்து நீர்திறந்து விட நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் வலியுறுத்தினர். அவர்களது கோரிக்கையை ஏற்று பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் சம்பா நெற்பயிரின் நிலையினை அறிந்திட தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில், கிராம அளவில் 30 குழுக்கள் அமைக்கப்பட்டு, 298 கிராமங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த குழுக்களின் அறிக்கையின் அடிப்படையில், திருவாரூர் மாவட்டத்தில் 4,715 ஏக்கரும், நாகப்பட்டினத்தில் 18,059 ஏக்கர் உள்பட மொத்தம் 22,774 ஏக்கரில் பாசன நீர் பற்றாக்குறையால் சம்பா நெற்பயிர் பாதிக்கப்படும் என தெரிய வந்துள்ளது. எனவே, விவசாய பெருமக்களின் நலன் கருதி, மேட்டூர் அணையில் இருந்து இன்று (3ம்தேதி) முதல் இரண்டு எடிம்சி தண்ணீரை திறந்துவிட உத்தரவிடப் பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் நீரினை சிக்கனமாக பயன்படுத்தி, சம்பா நெற்பயிரை பாதுகாத்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

The post மேட்டூர் அணையில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: