உதிரிபாகங்களுக்கான இறக்குமதி வரி குறைப்பு; செல்போன் விலை 5% குறைய வாய்ப்பு: ஒன்றிய நிதியமைச்சகம் தகவல்

புதுடெல்லி: செல்போன் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் உதிரிபாகங்கள் மீதான இறக்குமதி வரியை 15 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக ஒன்றிய அரசு குறைத்ததால், செல்போன்களின் விலை மூன்று முதல் ஐந்து சதவீதம் வரை குறையும் என்கின்றனர். ஒன்றிய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘செல்போன்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பேட்டரி, லென்ஸ், பின் அட்டை, பிளாஸ்டிக் பாகங்கள், சிம் சாக்கெட்டுகள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது.

இந்த வரி குறைப்பானது ஜனவரி 30ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்தியாவில் ஸ்மார்ட்போன்களின் உற்பத்திச் செலவைக் குறைக்கவும், சீனா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் போட்டியை எதிர்கொள்ளவும் இறக்குமதி வரிகளை குறைக்க ஏற்கனவே நிறுவனங்கள் கோரியிருந்தன. அதையடுத்து இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் இந்திய செல்போனின் ஏற்றுமதி திறனை அதிகரிக்க முடியும்.

பிரீமியம் செல்ேபான்களின் பயன்படுத்தப்படும் சிறப்பு உதிரிபாகங்களுக்கு 2.5 சதவீத சுங்க வரி விலக்கு ஏற்கனவே அளிக்கப்பட்டது. தற்போது மற்ற செல்போன்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் உதிரிபாகங்கள் மீதான இறக்குமதி வரியை 15 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைத்ததால், செல்போன்களின் விலை மூன்று முதல் ஐந்து சதவீதம் வரை குறையும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post உதிரிபாகங்களுக்கான இறக்குமதி வரி குறைப்பு; செல்போன் விலை 5% குறைய வாய்ப்பு: ஒன்றிய நிதியமைச்சகம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: