ஐக்கிய ஜனதா தளம் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் ராஜினாமா செய்யவிருப்பதாக தகவல்!

பாட்னா: ஐக்கிய ஜனதா தளம் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் ராஜினாமா செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ஜனதா கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் பாட்னாவில் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. ராஜினாமா செய்தபின் பாஜக ஆதரவுடன் நிதிஷ்குமார் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்பார் என தகவல் வெளியாகியிருக்கிறது. பீகாரில், முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளமும், துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதாதளமும் கூட்டணி ஆட்சி நடத்தி வருகின்றன.

இரு கட்சிகளும் ‘இந்தியா’ கூட்டணியிலும் இடம் பெற்றுள்ளன. ஆனால், சமீபகாலமாக இரு கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாக கூறப்படுகிறது. அதனால், கூட்டணியை விட்டு வெளியேறி, பா.ஜனதாவுடன் மீண்டும் கூட்டணி அமைக்க நிதிஷ்குமார் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. பாஜக ஆதரவுடன் மீண்டும் நிதிஷ்குமார் முதலமைச்சர் ஆக உள்ளதாகவும் இதுதொடர்பான பேச்சுவார்த்தை ஏறக்குறைய முடிவடைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

நிதிஷ்குமார் இன்று தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு நாளை மீண்டும் முதலமைச்சர் பாஜக ஆதரவுடன் பொறுப்பேற்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, ராஷ்டிரிய ஜனதா தளம் தனியாக ஆலோசனை நடத்தி வருகிறது. இதனால், பீகார் மாநில அரசியலில் உச்ச கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

The post ஐக்கிய ஜனதா தளம் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் ராஜினாமா செய்யவிருப்பதாக தகவல்! appeared first on Dinakaran.

Related Stories: